Dinakaran is rushing to Bangalore today as Sasikala is informed that today or tomorrow is available for parole

சசிகலாவுக்கு இன்று அல்லது நாளை பரோல் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், டிடிவி தினகரன் இன்று பெங்களூர் விரைகிறார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த சில தினங்களுக்கு முன்பாக சசிகலாவின் கணவர் நடராஜன் உடல் நலக் குறைவு காரணமாக தாம்பரம் அடுத்துள்ள மேடவாக்கம் அருகே குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கல்லீரல், சிறுநீரகங்கள் செயலிழந்ததாகவும், அது குறித்து சிறுநீரகங்கள், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியது.

உறுப்பு மாற்று சிகிச்சைக்காக கல்லீரல் தேடுதலில் ஈடுபட்டுள்ளதாகவும் டிடிவி தினகரன் கூறியிருந்தார். மேலும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், நடராஜனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக அதில் கூறப்பட்டது. 

இந்நிலையில், மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருக்கும் கணவர் நடராசனைப் பார்ப்பதற்காக, சிறையில் இருக்கும் சசிகலா பரோலுக்காக சிறை அதிகாரிகளிடம் மனு கொடுத்திருந்தார். 

அதில் வரும் அக்டோபர் 5 ஆம் தேதியிலிருந்து 15 நாட்களுக்கு பரோல் கேட்டிருந்தார். இதைதொடர்ந்து மனுவில் குறைபாடுகள் இருப்பதால் அவரின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

மேலும் கூடுதல் ஆவணங்கள் மற்றும் பிரமாண பத்திரங்களுடன் மீண்டும் பரோல் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது. 

இதனிடையே நடராஜனுக்கு கல்லீரல் அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். 

இதையடுத்து கணவர் நடராஜனின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்து மீண்டும் பரோல் கோரி மனு அளித்துள்ளார் சசிகலா. 

இந்த ஆவணங்களை தமிழக காவல்துறைக்கு மின்னஞ்சல் மூலம் கர்நாடக சிறைத்துறை அனுப்பி வைத்தனர். 

தொடர்ந்து சசிகலா தாக்கல் செய்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும், பின்னர், கர்நாடக சிறைத்துறைக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், சசிகலாவுக்கு இன்று அல்லது நாளை பரோல் கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து டிடிவி தினகரன் இன்று பெங்களூர் விரைகிறார்.