dinakaran explained about divakaran opinion

சசிகலா படும் துயரத்தைக் கண்டு அவரது சகோதரராக வருத்தப்பட்டு திவாகரன் கூறியதை எல்லாம் பெரிதுபடுத்த வேண்டாம் என தினகரன் தெரிவித்துள்ளார்.

சசிகலாவை ஜெயலலிதா நன்றாக பயன்படுத்திக்கொண்டு நிராயுதபாணியாக விட்டு சென்றுவிட்டார் எனவும் 33 ஆண்டுகள் கூடவே இருந்த சசிகலாவிற்கு எந்தவித பாதுகாப்பும் செய்துகொடுக்காமல் சசிகலாவை தன்னந்தனியே தவிக்கவிட்டு சென்றுவிட்டார் ஜெயலலிதா என திவாகரன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், திவாகரனின் கருத்து தொடர்பாக விளக்கம் அளித்தார்.

சசிகலாவிற்கு திவாகரன் உடன் பிறந்த சகோதரர். எனவே பல விஷயங்களில் அவர் துன்பப்படுவதைக் கண்டு வருத்தப்பட்டு, அவரை நிராயுதபாணியாக தன்னந்தனியாக விட்டு சென்றுவிட்டார் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். 

ஒரு குடும்பத்தில் மூத்தவர் மறைந்துவிட்டால், இப்படி தனியாக விட்டு சென்றுவிட்டாரே என்று சொல்வது இயல்பு. அதேபோன்ற கருத்தைத்தான், திவாகரனும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

தனது சகோதரி படும் துன்பத்தை தாங்கமுடியாத ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் அந்த கருத்தே தவிர, அதை பெரிதுபடுத்தும் அளவிற்கான உள்நோக்கம் கொண்டதல்ல என தினகரன் விளக்கமளித்தார்.