நான் எப்போ தூங்குறேன், எப்போ முழிக்கிறேனுலாம் பார்க்க தெரியுது.. அது மட்டும் முடியாதா..? தெறிக்கவிட்ட தினகரன்
போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழையும் வரை உளவுத்துறையும் காவல்துறையும் என்ன செய்து கொண்டிருந்தது என தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சட்டசபை கூட்டத்தில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விவர அறிக்கையை முதல்வர் தாக்கல் செய்தார். அப்போது, தூத்துக்குடி போராட்டத்தில் சில சமூக விரோதிகள் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டதால், வன்முறையை கட்டுப்படுத்த போலீஸார் தடியடி நடத்தி கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் நடவடிக்கை எடுத்தனர். அதன்பிறகு தவிர்க்க முடியாத சூழலில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக முதல்வர் விளக்கம் அளித்தார்.
சட்டசபையிலிருந்து வெளியே வந்த அமமுக துணை பொதுச்செயலாளரும் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினருமான தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான முதல்வரின் விளக்கத்தை கடுமையாக விமர்சித்தார்.
அப்போது பேசிய தினகரன், தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்துவிட்டதாக முதல்வர் கூறுகிறார். சமூக விரோதிகள் நுழையும் வரை உளவுத்துறையும் காவல்துறையும் என்ன செய்துகொண்டிருந்தது? தினகரன் எப்போது தூங்குகிறார்? எப்போது எழுகிறார்? என்பதை எல்லாம் கண்காணித்து ரிப்போர்ட் கொடுக்கும் உளவுத்துறையால், சமூக விரோதிகள் நுழைந்ததை கண்டுபிடிக்க முடியவில்லையா? என தினகரன் கேள்வி எழுப்பினார்.