dinakaran consult with his supporters

தகுதிநீக்கம் செய்யப்பட்ட தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் தினகரன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

முதலமைச்சர் பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றதற்காக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர் தனபால். இந்த தகுதிநீக்கத்தை எதிர்த்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கின் விசாரணையை அக்டோபர் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் வெற்றிவேல், ஏழுமலை, முத்தையா, தம்பிதுரை, சுப்பிரமணியம், பாலசுப்பிரமணியம் ஆகியோர் நேற்று சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டுக்கு வந்தனர். அங்கு தினகரனை சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில், தகுதி நீக்கம் செய்யப்படாத தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை அக்.4-ம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து தீர்ப்பின் அடிப்படையில் அடுத்தகட்டமாக எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுப்பது என்பது குறித்து தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் தினகரன் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.