”முனுசாமி”லாம் ஒரு ஆளே இல்லங்க..! இரட்டை இலை எங்களுக்குத்தான்... திடமாக கூறும் தினகரன்..!
இரட்டை இலை சின்னம் தொடர்பான இறுதி விசாரணை தேர்தல் ஆணையத்தில் இன்று நடைபெற உள்ள நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நவம்பர் 10-ம் தேதிக்குள் இரட்டை இலை சின்னம் தொடர்பான சரியான முடிவை எடுக்க முடியுமா என்பது சந்தேகம் தான் என தினகரன் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பான இறுதி விசாரணை இன்று பிற்பகல் தேர்தல் ஆணையத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில், சென்னை அடையாறில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் தினகரன் பேசியதாவது:
இரட்டை இலை சின்னத்தை பெறுவது தொடர்பாக எங்கள் தரப்பிலும் பழனிசாமி தரப்பிலும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அந்த ஆவணங்கள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் முழுமையாக சரிபார்க்க வேண்டும். சில பொதுக்குழு உறுப்பினர்கள், இரண்டு தரப்பு ஆவணங்களிலும் கையெழுத்திட்டிருக்கலாம். அவற்றையெல்லாம் தேர்தல் ஆணையம் ஆராய வேண்டும்.
இருதரப்பிலும் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் உண்மைத்தன்மையை தேர்தல் ஆணையம் ஆராய வேண்டும். ஆகவே இவையனைத்தையும் ஆராய்ந்து நவம்பர் 10-ம் தேதிக்குள் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இரட்டை இலை சின்னம் தொடர்பான தீர்ப்பை தேர்தல் ஆணையத்தால் வழங்க முடியுமா என்பது சந்தேகம் தான்.
ஒருவேளை அப்படி அவசர கதியில் வழங்கினால், அது நியாயமான நீதியாக இல்லை என்றால், எங்கள் தரப்பில் கண்டிப்பாக உச்சநீதிமன்றத்தை அணுகி சின்னத்தைப் பெறுவோம்.
தற்போது சின்னம் தொடர்பாக பேசும் கே.பி.முனுசாமி, எம்.எல்.ஏவும் கிடையாது. ஜெயலலிதாவால் அங்கீகரிக்கப்பட்டவரும் கிடையாது. எங்கள் குடும்பத்தை பற்றி தவறாக பேசியதால் குற்ற உணர்ச்சி காரணமாக பல்வேறு தருணங்களில் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார். அவரை மீண்டும் அழைத்து வந்ததே நாங்கள்தான்
யாரிடம் உதவி கோரி சின்னத்தை கைப்பற்ற பழனிசாமி நினைத்தாலும் பரவாயில்லை. எங்களுக்குத்தான் இரட்டை இலை சின்னம். அதை நீதிமன்றத்தின் வாயிலாக பெற்றே தீருவோம்.
இவ்வாறு தினகரன் பேசினார்.