இயக்கத்தின் பெயரை அறிவித்தார் தினகரன்.. தொண்டர்கள் ஆர்ப்பரிப்பு!!
தனது தலைமையிலான இயக்கத்தின் பெயரை அறிவித்து புதிய அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார் தினகரன்.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. பிறகு பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி அணிகள் இணைந்து, சசிகலா மற்றும் தினகரனை ஒதுக்கியது. முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக என்ற கட்சி ஆகியவற்றை பழனிசாமி-பன்னீர்செல்வம் அணியினருக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதையடுத்து நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன், ஆளும் அதிமுக, எதிர்க்கட்சியான திமுக ஆகிய இரண்டையும் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.
அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்பட்டு வரும் தினகரன், அதுவரை அரசியல் செய்வதற்கு தங்களது அணிக்கு அரசியல் ரீதியான அமைப்பு ஒன்று தேவை என்பதை உணர்ந்த தினகரன், வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் தங்களது அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் மூன்று கட்சி பெயர்களை வழங்கி, அவற்றில் ஏதேனும் ஒன்றை தங்கள் அணிக்கு ஒதுக்குமாறும் கோரினார்.
தினகரனின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைத்தது.
இதையடுத்து மேலூரில் இன்று பொதுக்கூட்டத்தை கூட்டி தனது தலைமையிலான இயக்கத்தின் பெயரை அறிவித்தார் தினகரன். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்று அறிவித்தார் தினகரன். அதிமுகவை மீட்டெடுக்கும் வரை இந்த பெயரில் தான் உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என அனைத்து தேர்தலையும் எதிர்கொள்ள போவதாக தெரிவித்தார்.
கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தினார் தினகரன். அதிமுகவின் கொடியை போன்றே கறுப்பு, வெள்ளை, சிவப்பு நிற கொடியின் நடுவே ஜெயலலிதாவின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.