மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் உள்ள புகழ்பெற்ற அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சாமி தரிசனம் மேற்கொண்டார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு மன்னம்பந்தல் வழியாக தருமை ஆதீனத்திற்கு ஆளுநர் வருகை புரிந்தார்.
அப்போது மன்னம்பந்தல் பகுதியில் பல்வேறு அமைப்பினர் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்த நிலையில் போராட்டக்காரர்களை தடுப்புகள் கொண்டு தடுத்து நிறுத்தினர். மேலும் போராட்டக்காரர்கள் கருப்புக் கொடியை ஏந்தியபடி ஆளுநருக்கு எதிரான வாசகங்கள் பதிக்கப்பட்ட பதாகைகளை பிடித்து கோஷங்களை எழுப்பினர். ஆளுநர் மன்னம்பந்தல் பகுதியை கடந்து செல்லும் போது போராட்டக்காரர்கள் ஆவேசமாக முழக்கமிட்டனர்.

தொடர்ந்து ஆளுநர் பின்னால் சென்ற பாதுகாப்பு வாகனங்கள் மீது போராட்டக்காரர்கள் கருப்புக் கொடியை வீசி எறிந்து பதாதைகளை சாலையில் தூக்கி வீசியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். பிறகு அவருக்கு ஆதினம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதன்பின் ஞானரத யாத்திரையை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, 'தருமபுரம் ஆதீனத்தில் நுழையும்போதே உடலில் ஒரு அதிர்வு ஏற்படுவதாகவும், தருமபுரம் ஆதீனம் பல கல்வி சேவைகளை ஆற்றி வருவதாகவும், இன்னும் 20 ஆண்டுகளுக்கு பிறகு உலகையே இந்தியாவே வழிநடத்தும் அதற்கு ஆன்மீகமே உறுதுணையாக இருக்கும். அந்த ஆன்மீகத்தை வளர்ப்பதில் தருமபுரம் ஆதீனம் முக்கிய பங்கு வகிக்கிறது' என்று பேசினார்.

தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் பேசும்போது, 'ரவி என்றால் சூரியன் என்று பொருள். தமிழகத்தில் ஆளுகின்ற கட்சியின் சின்னமும் உதயசூரியன்தான். உலகுக்கெல்லாம் ஒரு சூரியனாக இருந்தாலும்கூட, தமிழகத்தில் மட்டும் இரண்டு சூரியன்கள் ஒருமித்து இருப்பதையே நமக்கு இந்நிகழ்வு காட்டுகிறது. இது தெய்வ செயலாகும். ஆளுநரின் வருகைக்கு பிறகு தமிழகம் ஒளி பெற்றுள்ளது. சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநருடன் இணக்கமாக செல்ல வேண்டும்' என்று கூறினார்.
