தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குங்க.. தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக இரு அணிகளாக செயல்பட்டபோது, தற்காலிகமாக சின்னமும் கட்சி பெயரும் முடக்கப்பட்டது. பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி அணிகள் இணைந்தபிறகு, அவர்களுக்கே அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உத்தரவிட்டது.
அதன்பிறகு நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார் தினகரன். இதையடுத்து உள்ளாட்சித் தேர்தலிலும் தங்களுக்கு குக்கர் சின்னத்தையும் அதிமுக அம்மா என்ற பெயரையும் ஒதுக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
ஏற்கனவே அந்த வழக்கின் விசாரணை நடந்துவந்த நிலையில், பலகட்ட விசாரணைக்கு பிறகு வழக்கின் விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று இந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதில், தினகரன் அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தினகரனுக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பை தினகரன் ஆதரவாளர்கள் கொண்டாடிவருகின்றனர்.