சென்னையில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்! நகர துணை ஆணையர்கள் தங்கள் பகுதிகளுக்கு செல்ல அறிவுரை!
திமுக தலைவர் கருணாநிதி தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இன்னும் சில நிமிடத்தில், காவேரி மருத்துவமனை, கருணாநிதி குறித்து மூன்றாவது அறிக்கை வெளியிட உள்ளதால் இன்று மாலை முதலே அதிகளவில் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். தற்போதும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் திமுக தொண்டர்கள் ஏராளமான அளவில் காவேரி மருத்துவமனை முன்பு குவிந்துள்ளனர்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சற்றுநேரத்தில் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிடப்படவுள்ள நிலையில் தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
ஆயுதப்படை காவலர்கள் அரை மணி நேரத்தில் ராஜாஜி ஹால் , ராஜ ரத்தினம் ஸ்டேடியம் , பகுதிகளில் ஆஜராக வேண்டும் என காவல் துறை உயரதிகாரிகள் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
அதேபோல, மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலைய காவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளது.