பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப் பேசியது தொடர்பாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிரதமர் மோடி தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது, ‘திமுகவில் மூத்தத் தலைவர்களை ஒதுக்கிவைத்துவிட்டு உதயநிதிக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது’ என்று பேசியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக தேர்தல் பிரசாரத்தில் திமுக இளைஞர் அணி செயலர் உதயநிதி பேசினார். “திமுகவில் மூத்த தலைவர்களை ஓரங்கட்டி விட்டு, நான் குறுக்கு வழியில் அரசியலுக்கு வந்ததாக பிரதமர் பேசியிருக்கிறார். 'குஜராத்தில் முதல்வராக இருந்த மோடிதான், மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, வெங்கையா நாயுடு ஆகியோரை ஓரங்கட்டி குறுக்கு வழியில் முன்னுக்கு வந்தார். மத்திய அமைச்சர்களாக இருந்த சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி போன்றோர் மோடியின் தொல்லை தாங்காமல் இறந்து விட்டனர்” எனப் பேசினார்.
இந்தப் பேச்சு பாஜகவினர் இடையே கோபத்தை ஏற்படுத்தியது. உதயநிதி பேச்சுக்கு சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி ஆகியோரின் மகள்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் பிரதமரை அவதூறாகப் பேசிய உதயநிதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் தமிழக பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் புகார் அளித்தார். இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம், தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் கேட்டிருந்தார். இந்நிலையில், இந்தப் புகார் குறித்து இன்று மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்கும்படி உதயநிதிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
