"கருணாநிதியுடன் கூட்டணி வைத்துள்ள நீங்கள் ஊழல் பற்றி பேசலாமா?" - இளங்கோவனை வறுத்தெடுத்த தீபா!
இந்தியாவில் ஊழலின் ஊற்றுக்கண் காங்கிரஸ் கட்சி என்பது உலகம் அறிந்த உண்மை எனவும், கருணாநிதியுடன் கூட்டணி வைத்துள்ள ஈவிகேஸ் இளங்கோவன் ஊழல் பற்றி பேசலாமா என எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா கேள்வி எழுப்பியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து வந்தார். அப்போது சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கப்பட உள்ளதாகவும், அதை திறந்து வைக்க பிரதமருக்கு அழைப்பு விடுத்ததாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்,எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகே ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யபட்டது தவறு என்றும் ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் மணிமண்டபம் கட்டக்கூடாது என்றும் தெரிவித்தார்.
மேலும், சட்டப்பேரவையில் ஜெயலலிதா படத்தை வைக்க கூடாது என்றும் அவர் குறிபிட்டார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் ஊழலின் ஊற்றுக்கண் காங்கிரஸ் கட்சி என்பது உலகம் அறிந்த உண்மை.
முந்தரா ஊழல் குற்றச்சாட்டு தொடங்கி பக்ரானங்கள் அணை ஊழல் வரை சந்தி சிரித்த சரித்திரத்தை ஈ.வி.கே.எஸ்இளங்கோவன் மறந்து பேசுகிறாரா?
நகர்வலா கொலை வழக்குப் பற்றிய வரலாறு ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு தெரியுமா?
இந்தியாவில் பாதுகாப்பான இராணுவ தளவாடங்கள் வாங்கியதில் போபர்ஸ் பீரங்கி ஊழல் இளங்கோவனுக்கு தெரியதா?
கருணாநிதியுடன் கைக்கோர்த்துக் கொண்டு ஊழல் பற்றி ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வாய் திறக்கலாமா?
உலகம் போற்றும் 2G அலைகாற்று ஊழல் கனிமொழி, இராஜாவுடன் கூட்டணி வைத்து கொண்டு ஈ.வி.கே.எஸ்ஊழல் பற்றி உலரலாமா?
ஊழல் மன்னர்கள் தயாநிதி, கலாநிதி மாறன்களோடு ஈ.வி.கே.எஸ் கூடி குழாவுவது ஏன்?
ஆசிய விளையாட்டுப் போட்டியின் போது விளையாட்டு பொருட்கள் வாங்கியதில் ஊழல் என்று ஊழலின் பிறப்பிடமான காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு ஈ.வி.கே.எஸ் மக்கள் போற்றும் மகத்தான புரட்சித் தலைவி அம்மாப் பற்றி பேச யோக்கியதை இருக்கிறதா?
ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் தவறான பேச்சுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.