ஜெ.விற்கு எதிராக கருத்து தெரிவித்த ஈவிகேஎஸ் - உருவ பொம்மையை எரித்த தீபா பேரவையினர் கைது
ஜெயலலிதாவிற்கு எதிராக கருத்து தெரிவித்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உருவ பொம்மையை எரித்த தீபா பேரவையினர் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து வந்தார். அப்போது சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கப்பட உள்ளதாகவும், அதை திறந்து வைக்க பிரதமருக்கு அழைப்பு விடுத்ததாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகே ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யபட்டது தவறு என்றும் ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் மணிமண்டபம் கட்டக்கூடாது என்றும் தெரிவித்தார்.
மேலும், சட்டப்பேரவையில் ஜெயலலிதா படத்தை வைக்க கூடாது என்றும் அவர் குறிபிட்டார்.
இந்நிலையில், சென்னை சைதாபேட்டை பகுதியில் ஜெயலலிதாவுக்கு எதிராக கருத்து தெரிவித்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உறுவ பொம்மையை தீபா பேரவையினர் எரித்தனர்.
இதையறிந்த போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.