மீண்டும் அரைத்த மாவையே அரைக்கும் தீபா- சோர்வாகும் தொண்டர்கள்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மருமகள் என்ற தகுதியும் , சசிகலா மீது உள்ள கோபமும் அதிமுக தொண்டர்களை தன்னெழுச்சியாக தீபாவின் பக்கம் திருப்பியுள்ளது.தன்னெழுச்சியாக திரண்டு ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் தினந்தோறும் தீபாவின் வீட்டு வாசலில் காத்துகிடக்கின்றனர்.
ஜெயலலிதா போன்ற தோற்றமும் குரலும் கொண்டவராக இருக்கும் தீபாவை பார்க்கும்போது மறைந்த தங்கள் தலைவியையே பார்ப்பது போல் பரவசமாகி நிற்கின்றனர்
தொண்டர்கள். 1970 களில் தி.நகர் ஹபீபுல்லா சாலையிலுள்ள என்.டி.ராமாராவ் வீட்டுக்கு தினமும் வண்டிக்கட்டிக்கொண்டு நூற்றுக்கணக்கில் வருவார்கள். அதேபோல் தீபா வீட்டிற்கு தினமும் ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.
ஆனால் அவர்களிடம் தீபா ஒரே மாதிரி விஷயங்களை திரும்ப திரும்ப பேசி வருகிறார். கிளிப்பிள்ளை போல் , டீச்சரிடம் ரைம்ஸ் ஒப்பிக்கும் சிறுமியை போல் தீபா திக்கி திணறி பேசுவதை பார்க்கும் தொண்டர்கள் ஜெயலலிதாவின் மீதுள்ள பக்தி காரணமாக பெரிதாக எடுத்துகொள்ளவில்லை.
ஆயிரம் படித்திருந்தாலும் உறுதியான பேச்சு தொண்டர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் தலைவியாக திடமாக பேசுவது, தற்கால அரசியலை அலசுவது என்ற தலைவியைத்தான் தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இது போன்ற சவசவ என்று பேசும் ஒரே வசனம் அதிக நாள் எடுபடாது. எந்த விஷயத்திலும் இதுவரை தீபா ஒரு உறுதியான பதிலை சொல்லவில்லை. இத்தனை மாதம் கழித்து தற்போது அரசியலுக்கு வருவேன் என்று கூறியுள்ளார்.
யாரையும் குற்றம் சாட்டாமல் உறுதியாக எதையும் பேசாமல் , கட்சி அணிகள் கையில் இல்லாமல், கொள்கை உறுதி , வாக்கில் உறுதி , ஜெயலலிதாவின் உறுதி அந்த தைரியம் இல்லாமல் தீபா அதிக நாட்கள் இதே போன்று தள்ள முடியாது.
இன்று மாலை மீண்டும் தொண்டர்களை சந்தித்த தீபா கூறியதாவது:
நீங்கள் எந்த நம்பிக்கை வைத்துள்ளீர்களோ அதை காப்பாற்றுவேன். மக்களால் நான் மக்களுக்காக நான் (கைத்தட்டல், கூச்சால்) தமிழ் நாட்டிற்காகவும் , தமிழ் மக்களுக்காவும் , தமிழ் மண்ணுக்காகவும் தொடர்ந்து பணியாற்றுவேன்.
எதிர்காலம் நம்கையில் உள்ளது. நாம் பொறுமையோடு செயல்பட வேண்டும். இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் , புரட்சித்தலைவி பாதச்சுவடுகளை வணங்கி எனது பயணத்தை தொடர்வேன். உங்களுக்காக தொண்டு செய்ய காத்திருக்கிறேன்.
இதைகேட்ட ஒரு தொண்டர் தலைவி சூப்பர் ஸ்டார் ரஜினி தலை நிறைய முடி இருந்த போது அரசியலுக்கு விரைவில் வருவேன்னு ரசிகர்களிடம் சொன்னார். இப்ப அவர் த்லையில் ஒரு முடி கூட இல்லை. இப்பவும் அரசியலுக்கு வருவேன்னு சொல்றார்.
ஆனால் அதை நம்பத்தான் அவர் ரசிகர்கள் தயாராக இல்லை. அது போல பண்ணிடாதீங்க அம்மா என்று புலம்பிய படி சென்றார். காலத்தோடு சொல்லாவிட்டால் காதல் கூட கையைவிட்டு போய் விடும் , இது கட்சி தீபா என்ன செய்ய போகிறார்.