அணை கட்டுவது100 சதவிகிதம் உறுதி... தமிழகத்திற்கு என்ன பாதிப்பு..? எடியூரப்பா பிடிவாதம்..!
மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இதுகுறித்து தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதி தெரிவித்தேன்.
கர்நாடகாவில் உள்ள மேகதாதுவில் புதிய அணை கட்டுவது 100 சதவீதம் உறுதி என அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் அனைத்துக்கட்சி குழு டெல்லியில் நேற்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து, மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று கோரி கடிதம் வழங்கியது. இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து பேசுவதற்காக கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேற்று மதியம் பெங்களூருவில் இருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘’மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இதுகுறித்து தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதி தெரிவித்தேன். ஆனால், அந்த மாநிலம் மேகதாது திட்டத்தை எதிர்ப்பதில் பிடிவாதமாக உள்ளது. மேகதாதுவில் அணை கட்ட சட்டத்தில் சாதகமான அம்சங்கள் உள்ளன. இந்த திட்டத்தை செயல்படுத்த நாங்கள் சக்தியைமீறி முயற்சி செய்கிறோம். அதனால் மேகதாதுவில் 100 சதவீதம் புதிய அணை கட்டுவது உறுதி. கர்நாடக மக்களுக்கு இந்த உறுதிமொழியை அளிக்கிறேன்’’என அவர் தெரிவித்தார்.