ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது... தலைவா என புகழ்ந்து வாழ்த்திய பிரதமர் மோடி..!
பல தலைமுறைகளிடையே பிரபலமானவர், இவரது வேலையில் இருக்கும் பன்முகத்தன்மைக்கு ஈடாக ஒரு சிலர் மட்டுமே இருக்கின்றனர். வித்தியாசமான கதாபாத்திரங்கள், அன்பான ஒரு ஆளுமை.
தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திரைப்பட துறையில் சிறந்து விளங்குவோருக்கு 1969ம் ஆண்டு முதல் ‛தாதா சாகேப் பால்கே' விருது வழங்கப்பட்டு வருகிறது. அமிதாப் பச்சன், சத்யஜித் ரே, ராஜ் கபூர் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசன் (1996), கே.பாலச்சந்தர் (2010) ஆகியோர் இந்த விருதினை பெற்றுள்ளனர்.
இந்நிலையில், 51வது தாதா சாகேப் பால்கே' விருதினை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். அதன்படி, இந்திய திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு ‛தாதா சாகேப் பால்கே' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதினை பெறும் ரஜினிகாந்துக்கு பல்வேறு தரப்பில் வாழ்த்து குவிந்து வருகின்றனர். இந்நிலையில், தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள ரஜினிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- பல தலைமுறைகளிடையே பிரபலமானவர், இவரது வேலையில் இருக்கும் பன்முகத்தன்மைக்கு ஈடாக ஒரு சிலர் மட்டுமே இருக்கின்றனர். வித்தியாசமான கதாபாத்திரங்கள், அன்பான ஒரு ஆளுமை. அதுதான் ரஜினிகாந்த். தலைவனுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது என்பது அதிக மகிழ்ச்சியைத் தரும் ஒரு செய்தி. அவருக்கு வாழ்த்துகள் என கூறியுள்ளார்.