"மதவெறி சக்திகளிடம் இருந்து நாட்டை மீட்க வேண்டும்" - டி.ராஜா பரபரப்பு பேட்டி
இந்தியாவில் ஆளும் மதவெறி சக்திகளிடம் இருந்து நாட்டை மீட்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்பட பலர் இன்று சென்னை கோபால புரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி வீட்டுக்கு சென்றனர். அங்கு அவர்களை மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
அங்கு கருணாநிதியை சந்தித்த அவர்கள், உடல் நலம் குறித்து விசாரித்தனர். இதையடுத்து, டி.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தோம். அவரது உடல் நிலையில், தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்.
இன்றைய சூழலில், பாஜக தலைமையிலான மத்திய அரசு, மக்கள் விரோத கொள்கைகள், நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாடு சீர் குலைப்பு, மதவெறி தூண்டுதல், குடிமக்களின் உரிமைகள் பறிப்பு, அரசியல் சட்டத்தை சிறுமை படுத்துவது, நாடாளுமன்ற கொள்கைகள் சிறுமை படுத்துவது ஆகியவற்றை செய்து வருகிறது.
பொதுத்து துறை அனைத்தும் தனியார் மயம் ஆகிறது. இதனால், நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் மக்கள் விரோத செயலாளர் தொழிலாளர்கள், விவசாயிகள், நடுத்தரமக்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் நலனை காக்க மக்கள் இயக்கத்தை நடத்த வேண்டியது அவசியமாக உள்ளது. இதன் முன்னோட்டமாக நேற்று திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழா ஒரு பகுதியாகவே கொண்டாடப்பட்டது. தற்போதுள்ள சூழ்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி ஆரோக்கியமாக இருந்தால், அவர் இந்த அரசியல் சூழலுக்கான பணிகளை செய்து இருப்பார்.
ஆனால், கருணாநிதி செய்ய வேண்டிய பணிகளை மு.க.ஸ்டாலின் சிறப்பாக செய்துவிட்டார். இந்த ஒற்றுமை என்றும் இருக்கும். இதுதான் ஒற்றுமையான இயக்கம். இந்தியாவை மதவெறியில் இருந்து மீட்க வேண்டும். மதவெறி சக்தியிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும்.
ஜனாதிபதி தேர்தலில், அனைத்து கட்சி சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பது குறிக்கோள். இதற்காக 17 அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், சந்தித்து ஆலோசனை நடத்தினோம்.
எங்களிடம், பொது வேட்பாளர் அறிவிக்க கருத்து ஒற்றுமை இருக்கிறது. நாங்கள் அறிவிக்கும் ஜனாதிபதி வேட்பாளர், அரசியல் சட்டத்தை உயர்த்தி பிடிப்பவராக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.