பேரறிவாளன் பரோல் ; முதலமைச்சர் முடிவெடுப்பார் – சிவி சண்முகம் பேட்டி…
பேரறிவாளன் பரோல் குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக சிறையில் இருக்கும் சாந்தன்,முருகன்,பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் சிறையில் உள்ளனர்.
கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளனை பரோலில் விடுவிக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது. ஆனால் சிறை நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவித்தது.
இதையடுத்து பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இதனிடையே பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பேரறிவாளனுக்கு பரோல் கோரி நீண்ட நாட்களாக போராடி வருகிறார்.
இதனைதொடர்ந்து, சென்னை எழும்பூரிலுள்ள சிறைத்துறை தலைமை அலுவலத்தில் பரோல் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்த அற்புதம்மாள் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, பேரறிவாளன் பரோல் தொடர்பான ஆவணங்களை சிறைத்துறை அலுவலத்தில் வழங்கியுள்ளதாகவும், ஒரு வாரத்தில் பரோல் கிடைக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், பேரறிவாளன் பரோல் குறித்து சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, பேரறிவாளன் பரோல் குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அவர் முடிவெடுப்பார் எனவும் தெரிவித்தார்.