ஒரே மாதத்தில் 12 கோடி பேர் வேலை இழப்பு...!! ஆபத்தான பாதையில் இந்தியா..!!
நகர்ப்புற வேலை உறுதி திட்டம் துவக்கி அதில் சிறுகுறு தொழில் நிறுவனங்களில் பணி கொடுத்து ஊதியமும் அரசே கொடுக்கும் ஏற்பாட்டைச் செய்யலாம்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் ஒரே மாதத்தில் 12 கோடி பேர் வேலை இழந்துள்ளனர் என பொருளாதார அறிஞர் பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது, வேலையின்மை நமது நாட்டில் கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2017-18 காலத்தில் வேலையின்மை விகிதம் 2011-12 காலத்துடன் ஒப்பிடுகையில் மூன்று மடங்காக அதிகரித்தது என்று மைய அரசின் புள்ளியியல் ஆணைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இளைஞர்கள் மற்றும் படித்தவர்கள் மத்தியில் வேலை இன்மை 20 சதவீதத்தை நெருங்கியும் இருந்தது கடந்த 30 ஆண்டுகளாக நாட்டில் பின்பற்றப்படும் தாராளமான கொள்கைகள் வேலைவாய்ப்பை பெருக்கவில்லை. 2011 நவம்பரில் மோடி அமலாக்கிய பணமதிப்பு நீக்கம் நடவடிக்கையும், 2017-இல் மைய அரசு அவசர கோலமாகவும், குழப்பம் நிறைந்த முறையிலும் தீட்டி அமலாக்கிய ஜிஎஸ்டியும், பொருளாதாரத்தை, அதிலும் அதிகமாக முறைசாரா துறைகளைச் சீரழித்து விட்டன. வேலையின்மை அதிகரித்ததற்கு இக்கொள்கைகள் முதன்மையான காரணம்.
நமது நாட்டில் கூலி வேலை செய்பவர்கள், மொத்த உழைப்புப் படையில் சுமார் 50 சதவீதம் பேர்தான். மீதம் 50% பெரும்பாலும் சிறு சிறு உற்பத்தியாளர்கள். (விவசாயிகள், தொழில் செய்வோர்) மற்றும் சிறு குறு வணிகர்கள் ஆவர். இன்று இப்பகுதியினரில் கணிசமானவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக மைய அரசின் தவறான கொள்கைகளால் பொருட்களுக்கான கிராக்கி பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளதால், வேலை இழந்துள்ளனர் அல்லது தொழில் தொடர இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கொரோனா நம்மை தாக்கும் முன்பே இதுதான் நிலைமை. கொரோனாவிற்குப் பின் ஊரடங்கு தொடரும் நிலையில் பிரச்சனை மேலும் மோசமாகியுள்ளது. 14 கோடி பேர் என்று மதிப்பிடப்படும் புலம்பெயர் தொழிலாளர்கள் முறைசாரா துறைகளில் வேலை மற்றும் சுயதொழிலை இழந்தவர்கள் ஆகியோர் மட்டுமல்ல, ஆலைகளிலும் அலுவலகங்களிலும் முறைசார் பணிகளில் இருந்தவர்களிலும் பெருமளவினர் வேலை இழந்துள்ளனர். மைய அரசின் நிவாரண தொகைகள் மிகச் சொற்பம், ஏப்ரல் மாதம் மட்டும் 12 கோடி நபர்கள் வேலை இழந்துள்ளனர் என்று சி எம் ஐ இ என்ற ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது.
நிதியமைச்சர் 40 கோடி ரூபாய் கூடுதலாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி (ரேகா)திட்டத்திற்கு செலவு செய்வோம் என்பதை தவிர வேறு திட்டம் எதையும் முன்வைக்கவில்லை, ரேகா திட்டத்திற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட வேண்டும், ஊர் திரும்பும் அனைத்துப் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் தலா 100 நாட்கள் வேலைத் தரப்படவேண்டும் , ஊரக குடும்பம் ஒவ்வொன்றிற்கும் 100 நாள் என்பதை அக்குடும்பத்தில் வேலை செய்ய முன்வரும் ஒவ்வொருவருக்கும் ஒரு நாள் என்று ஆக்க வேண்டும். பணிகளின் தன்மை விரிவு செய்யப்பட்டு, கல்வி, ஆரோக்கியம், கட்டமைப்புத் துறைகளில் ரேகா தொழிலாளிகளுக்கு பணி அளித்து பயன்படுத்தலாம். பேரூராட்சிகள் உள்ளிட்ட நகர்ப்பகுதிகளில், நகர்ப்புற வேலை உறுதி திட்டம் துவக்கி அதில் சிறுகுறு தொழில் நிறுவனங்களில் பணி கொடுத்து ஊதியமும் அரசே கொடுக்கும் ஏற்பாட்டைச் செய்யலாம்.
இது சிறு குறு விவசாயிகளுக்கும் தொழில் முனைவோருக்கும் பொருளாதார மீட்சி பெற உதவும் .பொதுத்துறை சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு விற்பதற்கு பதில் கணிசமான முதலீடுகளை நவீன பெரும் தொழில்களிலும், நகர, ஊரக மற்றும் வேளாண்சார் கட்டமைப்பு பணிகளிலும் அரசு மேற்கொள்ள வேண்டும். இதற்கான வளங்களை பெரும் செல்வந்தர்கள் செலுத்த வேண்டிய வரி பாக்கிகளை கறாராக வசூல் செய்தும், தேவைக்கு ஏற்றவாறு கடன் வாங்கியும் திரட்ட முடியும். தொடர்ந்து பொதுத்துறையை வலுப்படுத்துதல், முழுமையான நிலச்சீர்திருத்தம், சுயசார்பு, கல்வி, ஆரோக்கியம் மற்றும் மக்கள் சார்பு கட்டமைப்பு ஆகியவற்றில் கூடுதல் அரசு முதலீடுகள், இதற்காக பெரும் கம்பெனிகள் மற்றும் உயர் வருமானம் பெறுவோர் மீதான வரிகள் மூலம், வேலைவாய்ப்பையும் பெருக்க முடியும் நாட்டையும் பாதுகாக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.