பாதிப்பு அதிகம் உள்ள 19 மாவட்டங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த எந்த வகையிலான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனவும் விவாதிக்கப்பட்டது.
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அது பலன் அளிக்காததால் அடுத்தக்கட்ட நடவடிக்கையை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

தற்போதுள்ள கட்டுப்பாடுகளை பொதுமக்கள் பின்பற்றினாலும் கூட நோயின் தாக்கம் தீவிரம் அடைந்து வருவதால் மேலும் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது. தலைமை செயலாளர் ராஜீவ்ரஞ்சன் தலைமையில் நடந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதார துறை இணை இயக்குனர் செல்வ விநாயகம், வருவாய் துறை அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான மேலும் பல அவசர நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்போடு மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்யப்படுகிறது. மைக்ரோ கட்டுப்பாட்டு பகுதிகள் அமைத்து துல்லியமாக கண்காணிக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டது. வர்த்தகம், தொழில் நிறுவனங்கள் பாதிக்காத வகையில் என்னென்ன கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம் என்று விவாதிக்கப்பட்டது.
வார இறுதியில் ஊரடங்கு, இரவு நேரத்தில் ஊரடங்கு கொண்டுவருவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு பொது ஊரடங்கு செயல்படுத்தப்பட்டது போல் இல்லாமல் சிறிய அளவிலான கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்யப்படுகிறது. மேலும் பாதிப்பு அதிகம் உள்ள 19 மாவட்டங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த எந்த வகையிலான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனவும் விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை தள்ளி வைக்கலாமா? அல்லது திட்டமிட்டபடி நடத்துவதா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. நேற்று நடந்த கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசித்தனர். இதில் பிளஸ்-2 தேர்வு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.
