"போற இடத்திலாவது விசுவாசமா இருங்க..." - நிர்மலா பெரியசாமிக்கு சி.ஆர்.சரஸ்வதி அட்வைஸ்...
போகிற இடத்திலாவது விசுவாசமா இருங்கள் என்று சசிகலா தரப்புக்கு எதிராக போர்கொடிதூக்கிய நிர்மலா பெரியசாமிக்கு சி.ஆர்.சரஸ்வதி அறிவுரை கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலா அணி ஒ.பி.எஸ் அணி என அதிமுக இரண்டாக பிளவடைந்தது.
பின்னர், சசிகலா தரப்பு ஆதரவாளர்கள் பெரும்பாலானோர் ஒ.பி.எஸ் பக்கம் வரத்தொடங்கினர்.
இதைதொடர்ந்து சசிகலா தரப்பில் இருந்த நட்சத்திர பேச்சாளர்களின் கூட்டமும் கரைய தொடங்கியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு சி.ஆர்.சரஸ்வதியின் கூடவே இருந்த அதிமுக நட்சத்திர பேச்சாளரான பாத்திமா பாபு ஒ.பி.எஸ்ஸிடம் தஞ்சம் அடைந்தார்.
தற்போது நட்சத்திர பேச்சாளரான நிர்மலா பெரியசாமி சசிகலா தரப்புக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். ஒ.பி.எஸ் பக்கம் இணைய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சசிகலா தரப்பு நட்சத்திர பேச்சாளர்கள் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் நிர்மலா பெரியசாமி பன்னீர்செல்வத்தை புகழ்ந்து பேசியுள்ளார்.
அதற்கு சசிகலாவின் விசுவாசிகளான வளர்மதியும், சி.ஆர் சரஸ்வதியும் கடுமையாக திட்டியுள்ளனர். மேலும் அங்கிருந்து வெளியேறுமாறும் வற்புறுத்தியுள்ளனர். இதனால் நிர்மலா பெரியசாமி அங்கிருந்து வெளியேறினார்.
இதையடுத்து வளர்மதியையும், சி.ஆர்.சரஸ்வதியையும் கடுமையாக விமர்சித்தார் நிர்மலா பெரியசாமி.
இந்நிலையில், இதுகுறித்து சி.ஆர்.சரஸ்வதி நிர்மலா பெரியசாமிக்கு அறிவுரை கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது :
மற்றவர்களை பற்றி புறம் பேசக்கூடாது.
இங்கே இருந்து கொண்டு அவர்களை புகழ்ந்து கொண்டிருப்பது ஏற்று கொள்ள முடியாத ஒன்று.
போகிற இடத்திலாவது தலைமைக்கு விசுவாசமாக இருங்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.