தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றணும்.. பட்ஜெட்டில் அறிவிக்கணும்.. திமுக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை.!
குறைந்தபட்ச தேர்தல் வாக்குறுதிகளையாவது தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். வரவிருக்கும் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் அதற்கான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசின் நிதி நிலைமை பற்றி நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெள்ளை அறிக்கை வெளியிட்டார். தமிழகத்துக்கு ஏற்பட்ட நிதிச் சீரழிவால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.2.63 லட்சம் கடன் தலையில் ஏறியிருக்கிறது என்று பகீர் தகவலை வெளியிட்டார். இந்த வெள்ளை அறிக்கையால் தமிழகத்தில் பேருந்து, மின்சாரம் கட்டணம் அதிகரிக்கப்படலாம், சொத்துவரி உயரலாம் என்று கூறப்படுகிறது. இந்த வெள்ளை அறிக்கைக்கு பல கட்சித் தலைவர்களும் ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஜி.ராமகிருஷ்ணன் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழகத்தின் நிதிநிலைமை தொடர்பாக வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், உரிய முறையில் தமிழகத்தின் நிதிநிலையை மேம்படுத்த வேண்டும். குறைந்தபட்ச தேர்தல் வாக்குறுதிகளையாவது நிறைவேற்ற வேண்டும். வரவிருக்கும் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் அதற்கான அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.
கொரோனா பரவல் காலத்தில் வாழ்வாதாரத்தை தமிழக மக்கள் இழந்துள்ளனர். தங்களின் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு பெற்றோர்கள் மாற்றம் செய்துவருகிறார்கள். எனவே பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்களைக் கட்ட வேண்டும். ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கல்வித் தரத்தை மேம்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஆர்.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.