ஜெ.மரணம்... நீதிபதி மீது பகீரங்க விமர்சனம்.!! - வைகோ மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
ஜெயலலிதா மரணம் குறித்து கருத்து தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதியை பிரஸ் மீட்டில் பகீரங்கமாக விமர்சித்த வைகோ மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அதிமுக பிரமுகர் ஜோசப் தொடர்ந்த வழக்கு கடந்த 29ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி வைத்தியநாதன் ஜெயலலிதா மரணம் தொடர்பாக தனக்கும் சந்தேகம் இருப்பதாக கருத்து தெரிவித்திருந்தார். அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில் மதிமுக பொது செயலாளர் வைகோ கடந்த 1ம் தேதி புத்தாண்டு அன்று செய்தியாளர் சந்திப்பில், நீதிபதியை விமர்சித்து கருத்து தெரிவித்தார். ஜெயலலிதா மரணம் பற்றி எப்படி சந்தேகிக்கலாம் , எந்த ஆதாரத்தை நீங்கள் வைத்திருக்கிறீர்கள் என உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதனை பகீரங்கமாக விமர்சித்திருந்தார்.
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. நீதிபதியை விமர்சித்து கருத்து தெரிவித்த வைகோ மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுகொள்ளப்பட்டது. விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.