கொரோனாவால் அனுமதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்... மருத்துவமனை அறிக்கை..!
கொரோனா காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக கட்சியின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி வந்தார். நேற்று முன்தினம் முன்னாள் திமுக தலைவர் கலைஞரின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பாக ஏற்பாடுகளை செய்து வந்தார். இந்நிலையில், உடல்நலக் குறைவால் இரண்டு நாட்களாக தனிமைப்படுத்திக் கொண்ட அவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
அவருக்கு ஏற்கனவே ரத்த அழுத்தம், கல்லீரம் மாற்று அறுவை சிகிச்சை பிரச்சனை இருந்து வந்த நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டு சென்னை குரோம்பேட்டை ரேலா மருத்துவ ஆய்வு நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள, திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜெ. அன்பழகனின் உடல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பேசிய முதல்வர் அரசு சார்பில் என்ன உதவி வேண்டுமானாலும் உடனடியாக செய்யுங்கள். மேலும், தேவைப்பட்டால் தமிழக அரசில் பணியாற்றும் சிறப்பு மருத்துவர்களை உடனடியாக ரேலா மருத்துவமனைக்கு அனுப்பி வையுங்கள் என்று முதல்வர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மருத்துவமனை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜெ. அன்பழகனுக்கு எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பதன் விவரம் அடங்கியுள்ளது. அதில், தற்போது சூழலில் 80% ஆக்சிஜன் வெண்டிலேட்டர் மூலமே கொடுக்கப்படுகிறது. தொடர்ந்து அவரை மருத்துவர்கள் கணிகாணித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 80% ஆக்சிஜன் வென்டிலேட்டர் மூலமே சுவாசிப்பது அவரது உடல்நிலை மோசமாக இருப்பதையே காட்டுகிறது. கடந்த 24 மணி நேரமாக அவரது உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவருக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்து வருகிறார்.