Breaking:தமிழகத்திலேயே கொரோனா தடுப்பூசி, ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும்.. முதலமைச்சர் அதிரடி சரவெடி அறிவிப்பு.
தடுப்பூசிகள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் தமிழ் நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தடுப்பூசிகள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் தமிழ் நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்: தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் ஒரு நிரந்தர தீர்வாக, நம் மாநிலத்திலேயே ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை துவக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்.
இது மட்டுமின்றி மருத்துவம் உயர் தொழில்நுட்ப சாதனங்கள் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், தடுப்பூசிகள் மற்றும் கொரோனா தொடர்பான மருந்துகள் உற்பத்தியை நம் மாநிலத்திலேயே உருவாக்குவதற்கும், தொழில் கூட்டு முயற்சிகளை உருவாக்கவும் உத்தரவிட்டுள்ளார்கள். இதனடிப்படையில் தொழில் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் டிட்கோ மேற்காணும் அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஆதரவும், உதவிகளையும் அறிவிக்கும்.
குறைந்தபட்சம் 50 கோடி ரூபாய் முதலீடு செய்யும் நிறுவனங்களுடன், டிட்கோ நிறுவனம் கூட்டாண்மை அடிப்படையில் இவ்வாலைகளை நிறுவுவதற்கு விருப்பமுள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து விருப்ப கருத்துக்களை 31-5-2021 க்குள் கோரியுள்ளது. அவ்வாறு பெறப்படும் விருப்ப கருத்துக்கள் ஆய்வு செய்யப்பட்டு, ஆக்ஸிஜன், தடுப்பூசிகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் உற்பத்தி உட்கட்டமைப்புகளை விரைவில் நிறுவிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.