புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி.. மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!
புதிய ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.2,000 வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
புதிய ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.2,000 வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 15-ம் தேதியில் இருந்து முதல் தவணையாக ரூ.2000 பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதிய ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வாங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டு, நோய்ப் பரவலைத் தடுக்கும் பொருட்டு, தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கொரோனா நோய் தொற்றின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைக்கும் வகையிலும், பெருந்தொற்று நேரத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும், ரூ.4153.39 கோடி செலவில், மே மாதத்தில் 2,07,66,950 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2000 நிவாரணத் தொகையினை முதல் தவணையாக வழங்க ஏற்கெனவே முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள்.
இதனைத் தொடர்ந்து, தற்போது நடைமுறைக்கு வந்துள்ள 2,14,950 புதிய அரிசி குடும்ப அட்டைகளை பெற்றுள்ள குடும்ப அட்டைதாரர்களின் வாழ்வாதாரத்திற்கும் மேற்கூறிய உதவியை வழங்கிடும் வகையில், ரூ.42.99 கோடி செலவில் மே 2021 மாதத்தில் ரூ.2,000 நிவாரணத் தொகையினை முதல் தவணையாக வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.