கொரோனா தவறாக கையாளப்படுகிறது... மோடி அரசை விமர்சித்து கிழித்தெடுத்த பிரஷாந்த் கிஷோர்..!
இந்த நிலைமையை எப்படி சமாளிக்கப்போகிறோம், கடக்கப்போகிறோம் என்பதை எண்ணினால் பெரும் சவலாக கண் முன் நிற்கிறது.
ஒரு வைரஸ் எப்படிப்பட்ட பேரழிவை உருவாக்கும் என்பதற்கு இந்தியாவே சான்று என உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறுகிறார். இந்தியா மீது கரிசனம் காட்டி அவர் பேசினாலும் உலக நாடுகளுக்கு ஒரு மோசமான முன்னுதாரணமாக இந்தியாவைச் சொல்லியிருக்கிறார் என்றே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசோ, இன்னும் சில வாரங்கள் நிலைமை படு மோசமாக இருக்கும்; எதையும் எதிர்கொள்ள துணிவுடன் இருங்கள் என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
பெரும்பாலான நாடுகளில் கொரோனா பரவல் குறைந்திருக்கும் நிலையில் இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. வட மாநிலங்கள் எங்கு காணினும் மரண ஓலங்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றன. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. இந்த நிலைமையை எப்படி சமாளிக்கப்போகிறோம், கடக்கப்போகிறோம் என்பதை எண்ணினால் பெரும் சவலாக கண் முன் நிற்கிறது.
இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் மத்திய அரசை மறைமுகமாக விமர்சித்து ட்வீட் செய்துள்ளார். அதில், "இந்தியாவில் கொரோனாவை தவறாகக் கையாள்வது முதல் அலையில் விசித்திரமான மற்றும் மோசமாக நிர்வகிக்கப்பட்ட ஊரடங்கு மூலம் கொரோனாவைவிட அதிகமான துன்பங்களையும், சோகங்களையும் மக்களுக்குக் கொடுத்தது.
கொரோனா இரண்டாம் அலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை, மருந்துகள் பற்றாக்குறை மற்றும் படுக்கைகள் பற்றாக்குறை. இது கொரோனா வைரசைவிட அதிக அளவிலான உயிரிழப்புகளை ஏற்படுத்துகின்றன. இரண்டிலும் பொதுவானது ஒன்று தான் - தொலைநோக்கு பார்வையின்மை நிலைமையை மிக மோசமாகக் கையாள்வது" என விமர்சித்துள்ளார்.