சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது... அதிர்ச்சியில் சசிகலா ஆதரவாளர்கள்...!
உடல் நலக் குறைவால் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சொத்துகுவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று சசிகலா வரும் 27-ம் தேதி விடுதலையாக இருந்தார். இந்நிலையில் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்த சசிகலாவுக்கு காய்ச்சலுடன் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து பெங்களுரு அரசு பவுரிங் மருத்துவமனையில் சசிகலா சேர்க்கப்பட்டார். சசிகலாவுக்கு ஏற்கெனவே நீரிழிவு, ஹைப்பர் தைராய்டு உள்ளிட்ட கோளாறுகள் இருந்தன. இந்நிலையில் அவருடைய உடலில் ஆக்சிஜன் அளவு 73 என இருந்தது.
இதனால், சசிகலா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே சசிகலாவுக்கு ஆர்டிபிசிஆர் சோதனை செய்யப்பட்டது. இந்தச் சோதனையில் சசிகலாவுக்கு கொரோனா இல்லை என்று தெரிய வந்தது. இதனையடுத்து சிடி ஸ்கேன் பரிசோதனைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு சசிகலா அழைத்து செல்லப்பட்டார். அங்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேனில், லேசான தொற்று இருப்பதும் நுரையீரலில் பாதிப்பும் உறுதி உறுதியானது.
அதைத் தொடர்ந்து அவருக்கு மீண்டும் ஆர்டிபிசிஆர் சோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சசிகலா விடுதலையாக 5 நாட்களே உள்ள நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இருபது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், இரு வாரங்களுக்கு அவர் தனிப்படுத்தி சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். இது அவருடைய ஆதரவாளர்களுக்கும் அமமுகவினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.