அடுத்த வாரத்திற்குள் கொரோனா பாதிப்பு 1 கோடியை எட்டும்... அதிர்ச்சியூட்டும் உலக சுகாதார அமைப்பு தகவல்..!
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அடுத்த வாரத்திற்குள் 1 கோடியை எட்டக் கூடும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அடுத்த வாரத்திற்குள் 1 கோடியை எட்டக் கூடும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனாவால் உலகளவில் 95,33,440 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4,85,160 பேர் உயிரிழந்துள்ளனர். வேகமாக பரவி வரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அடுத்த வாரத்திற்குள் ஒரு கோடியை எட்டக் கூடும் என உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்த ஆராய்ச்சியை தீவிரப்படுத்த வேண்டும் என நமக்கு இது நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது என்றும் கூறியுள்ளார். கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்பைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆக்ஸிஜன் செலுத்துவது அவசியமானது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாளொன்றுக்கு 88,000 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தேவைப்படும் என டெட்ரோஸ் கூறியுள்ளார். வரும் வாரத்தில் 14,000 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை 120 நாடுகளுக்கு அனுப்பி வைக்க உலக சுகாதார அமைப்பு திட்டமிட்டுள்ளது என்றும் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.