கூட்டுறவு வங்கி முறைகேட்டில் அதிரடி திருப்பம்... நகைக் கடன்களை ஆய்வு செய்ய குழு அமைத்து அரசு கிடுக்கிப்பிடி.!
கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து நகைக்கடன்களையும் ஆய்வு செய்ய தமிழக அரசு குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் முந்தைய ஆட்சியில் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக திமுக அரசு குற்றம் சாட்டி வருகிறது. கவரிங் நகைகளுக்குக்கூட கடன் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு கூறியிருந்தார். கூட்டுறவு நகைக்கடன் முறைகேட்டில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை உறுதி என்றும் திமுக அரசு கூறிவருகிறது. இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட நகைக்கடன்களை 100 சதவீதம் ஆய்வு செய்ய தமிழக அரசு குழு அமைத்திருக்கிறது.
இதுதொடர்பாக ஆய்வு செய்ய கூட்டுறவு சார்பதிவாளர், கூட்டுறவு வங்கியின் சரக மேற்பார்வையாளர், நகை மதிப்பீட்டாளர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 5 சவரன் நகை மட்டுமல்லாமல் வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து நகைக்கடன்களையும் இக்குழு ஆய்வு செய்ய உள்ளது. சென்னை மண்டலத்தில் துணை பதிவாளர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்து அறிக்கை தரவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வை முடித்து நவம்பர் 20-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட 5 சவரன் நகைகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்திருந்தது. இதன்படி கடன் தள்ளுபடியை தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.