சர்ச்சை அமைச்சர் சீனிவாசனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு
ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை டிடிவி.தினகரன் பயன்படுத்துகிறார் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அவரை பதவி நீக்கம் செய்ய கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சமீபகாலமாக ஏதாவது ஒன்றை பேசி தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
அந்த வகையில் கடந்த வாரம் திண்டுக்கல்லில் பேசிய போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அவர் பேசியது பெரிய பிரச்சனைக்கு வித்திட்டது. அதில் ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை டிடிவி. தினகரன் திருடிவிட்டார் என பேசினார். சீனிவாசன் இப்படி பேசியிருப்பது அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் திண்டுக்கல் சீனிவாசனை பதவி நீக்கம் செய்ய கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை மதுரை மாவட்ட அதிமுக அம்மா பேரவை துணைச் செயலரும், மாநகராட்சி முன்னாள் கவுன்சிலருமான ராஜா எஸ்.சீனிவாசன், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில் இறந்தவர்கள் மீது அவதூறு பரப்புதல், மறைந்தவர்களின் புகழக்கு குற்ற உணர்வுடன் களங்கம் ஏற்படுத்தல், கட்சியில் குழப்பம் விளைவித்தல் போன்ற பிரிவின் கீழ் அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.