வணிகர்கள் மீது கட்டுப்பாடு என்பது அபத்தமானது.. அரசுக்கு எதிராக சீறும் விக்கிரமராஜா..
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் சிறு வணிகர்கள் மீது அதிரடியாக கட்டுப்பாடுகள் திணிக்கக்கூடாது எனவும், இது நியாயமற்றது எனவும், அதிகாரிகள் இதனை உடனே மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம் விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் சிறு வணிகர்கள் மீது அதிரடியாக கட்டுப்பாடுகள் திணிக்கக்கூடாது எனவும், இது நியாயமற்றது எனவும், அதிகாரிகள் இதனை உடனே மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம் விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம்: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வருகிற 10ஆம் தேதி முதல், கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லறை வியாபார காய்கறி அங்காடிகள், செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு சென்னை கோயம்பேடு வணிக வளாகம் முழுமையாக மூடப்பட்டிருந்த நிலையில், சில்லறை வணிகர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்குப் பின்னர் படிப்படியாக கோயம்பேடு வணிக வளாகம் திறக்கப்பட்டு இப்போதுதான் அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் அதிகாரிகளின் தன்னிச்சையான முடிவுகள் அனைத்து குடிமக்களின் வாழ்வாதாரத்தை பறிப்பதுடன் மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரமும் சீரழிக்கப்படுகிறது.
வணிகர்கள் மீது அதிரடி கட்டுப்பாடுகளை திணிப்பது என்பது நியாயமற்றது. இதனை அரசு அதிகாரிகள் சீர்தூக்கி பார்த்திட வேண்டும். எனவே சில்லரை வணிகத்தில் விதிக்கப்படும் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி, சுழற்சி முறையில் வணிகம் நடைபெற்று, வணிகர்கள் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்திக்கொள்ள அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.