அமமுகவினர் திமுகவுக்கு செல்வதில் சதி.. சசிகலா, தினகரன் திமுக கைப்பாவைகள்.. மாஜி அமைச்சர் குற்றச்சாட்டு..!
சசிகலாவும் தினகரனும் திமுகவின் கைப்பாவையாகச் செயல்பட்டு வருகிறார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.
வாணியம்பாடியில் கே.சி.வீரமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சட்டப்பேரவைத் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை தெரிவித்துதான் திமுக வெற்றி பெற்றது. குறிப்பாக, நீட் தேர்வு ரத்து, குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ.1,000, பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு, காஸ் மானியமாக ரூ.100 என பல தேர்தல் வாக்குறுதிகளைத் திமுக நிறைவேற்றுவதாக அறிவித்தது. ஆனால், எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இதன் மூலம் திமுக சொன்னது எல்லாம் பொய்யான வாக்குறுதிகள் என்பதை மக்களுக்குத் தெரிந்துவிட்டது.
உள்ளாட்சித் தேர்தல் எப்போது அறிவிக்கப்பட்டாலும் அதைச் சந்திக்க அதிமுக தயார். மாணவர்களின் நலன் கருதியே விழுப்புரத்தில் அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. ஆனால், அதை திமுக அரசு ஒரு தலைபட்சமாகச் செயல்பட்டு அந்தப் பல்கலைக்கழகத்தை முடக்கியுள்ளது. அதிமுக ஆட்சியில் இப்படியெல்லாம் பாகுபாடு பார்க்கவில்லை. மக்கள் நலனே முக்கியம் என்பதை மட்டுமே அதிமுக அரசு எண்ணியது.
சசிகலா, டிடிவி தினகரனுடன் பேசுவோர் எல்லோருமே அமமுகவினர்தான். சசிகலாவிடம் தொலைபேசியில் பேசுபவர்கள் அமமுகவிலிருந்து விலகி திமுகவில் போய்ச் சேர்கிறார்கள். இதில், ஏதோ சூழ்ச்சி நடப்பதாகத் தெரிகிறது. சதித் திட்டம் நடைபெறுவதை அறிந்த சசிகலா தொலைக்காட்சிகளில் பேட்டியளிக்கத் தொடங்கியிருக்கிறார். சசிகலாவும் தினகரனும் திமுகவின் கைப்பாவையாகச் செயல்பட்டு வருகிறார்கள். அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி விரைவில் கொண்டாட உள்ளோம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொன்னதை போல 100 ஆண்டுகள் கடந்தாலும் அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது.” என்று கே.சி.வீரமணி தெரிவித்தார்.