சீன விசுவாசி ஆகிவிட்ட ராகுல்... தலைவரான பின் முதன்முதலில் அமேதியில் பேசிய பேச்சே சர்ச்சையானது!
ராகுல் காந்தி தற்போது சீன விசுவாசி போல், சீனவை வானளாவப் புகழ்ந்து பேசியுள்ளார். அதுவும் அவரது சொந்த தொகுதியான அமேதியில். இது அங்கே சர்ச்சையை ஏற்படுத்தியது.
காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், ராகுல் காந்தி இன்று முதல்முறையாக தனது சொந்த தொகுதியாக அமேதிக்குச் சென்றார். இன்று அவர் இரண்டாவது நாளாக தனது தொகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கே மக்கள், கட்சித் தொண்டர்களிடம் பேசினார் ராகுல். அப்போது அவர், சீனாவை வானளாவப் புகழ்ந்தார்.
சீன அரசு 24 மணி நேரத்தில் செய்வதை மோடி அரசு 4 ஆண்டுகள் எடுத்துக் கொண்டு செய்கிறது என்று கூறினார். இது சீனாவைப் புகழ்ந்து பேசியதாக தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர். அண்மையில் கூட ராகுல் காந்தி சீன நாட்டின் தூதரைச் சந்தித்தது குறித்து பெரும் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் மீண்டும் சீனாவைக் குறித்துப் பேசி, கவனத்தை ஈர்த்துள்ளார். குறிப்பாக சீனாவைக் குறித்து மக்கள் மனநிலை மாறியுள்ள சூழ்நிலையில், சீனாவைக் குறித்து புகழ்ந்து பேசியது, உள்ளூர் நிர்வாகிகள், கட்சி உறுப்பினர்கள் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
ராகுலின் இந்த பேச்சுக்கு உடனே அவர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் உள்ளூர் நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. ராகுலின் இந்தப் பேச்சால், அமேதி தொகுதியின் பல இடங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.