Congress ex MP Mani Shankar Aiyar anger on his party men
திராவிட கட்சிகள் போல் அல்லாமல் காங்கிரஸின் பல தலைவர்கள் இயல்பாகவே பண்ணையார்கள்தான். அதாவது பெரும் செல்வ செழிப்புடனே கட்சிக்குள் எண்டரானவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு கட்சியின் அடி மட்ட தொண்டன் மற்றும் உழைப்பால் உயர்ந்து வரும் நிர்வாகிகளின் உணர்வுகள், பிரச்னைகள் புரியாது. வாய்க்கு வந்ததை பேசுவதும், எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று தூக்கி எறிந்து பேசுவதும் அவர்களின் இயல்பு என்று ஒரு விமர்சனம் உண்டு.
தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் ‘பண்ணையார்’ தலைவர்களின் முக்கியமானவர் மணிசங்கர் அய்யர். கட்சி, காட்சியிலிருந்து நெடுங்காலம் காணாமல் போயிருந்தவர் சமீபத்தில் தொகுதிக்குள் வலம் வந்தார். அப்போது ஒரு டீக்கடை ஓரமாய் நின்று கொண்டிருந்த காங்கிரஸ் சிறு நிர்வாகிகள் நான்கு பேரை பார்த்து ‘ மத்தவங்களை எங்கேபா?’ என்றார். அவர்களோ ‘எல்லாரும் ஒரு கல்யாண வீட்டுக்கு போயிருக்காங்க.’ என்று சொல்ல இவரோ, ‘கம்...னா..ங்க, கட்சிக்காரன் இப்படியிருந்தா கட்சி எப்படிடா உருப்படும்?’ என்று சவுண்டு விட்டிருக்கிறார்.
உடனே ஒரு நிர்வாகி தில்லாக ‘திராவிட கட்சிகள்ள தொண்டர்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு கூட தலைவர்கள் வர்றாங்க. ஆனா நம்ம கட்சியில அதெல்லாம் நடக்கிறதில்லை. கல்யாணம், காதுகுத்துன்னு பத்திரிக்கை கொடுக்க போனா கூட கண்டுக்குறதில்லை. பின்னே எப்படி கட்சி வளரும்?’ என்று எதிர்கேள்வி போட்டிருக்கிறார்.
கடுப்பான மணிசங்கர் அய்யார் அவரை முறைக்க அடுத்த நிர்வாகியோ ‘ஆளுங்கட்சியில தீபாவளிக்கு ஒவ்வொரு கிளைச்செயலாளருக்கும் மூவாயிரம் ரூபாய் கொடுத்தாங்க. ஆனா நீங்க என்ன செஞ்சிருக்கீங்க, ஒரு ரூபாயாச்சும் கொடுத்தீங்களா? காண்ட்ராக்ட், கமிஷன் எல்லாத்தையும் நீங்களேதானே வெச்சுக்கிறீங்க’ என்று நெற்றியடியாய் அடிக்க,
கடுப்பின் உச்சிக்கு போன அய்யர் ‘அதெல்லாம் இப்ப பேசாத. போயி முதல்ல கட்சி வேலையை பாரு. தொண்டர்களை கூட்டிட்டு வா. அதுக்கு முன்னாடி உன் பொண்டாட்டிய காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போடச்சொல்லு.’ என்று சொல்லிவிட்டு நகர்ந்திருக்கிறார்.
தேர்தலில் மச அடிபட்டாலும் நம்ம கட்சி பண்ணையார்களுக்கு வாய் மட்டும் குறையமாட்டேங்குது! என்று புலம்பியிருக்கின்றனர் நிர்வாகிகள்.
அய்யர் சூடாக சொன்ன வார்த்தைகள் அந்த நிர்வாகியின் மனதை ரொம்பவே காயப்படுத்திவிட்டதாம். கொஞ்சம் அசந்திருந்தாலும் அய்யரின் சட்டை கிழிந்திருக்கும் அன்று! என்கிறார்கள் பதற்றமாக.
