ஏமாற்று வேலையால் காங்கிரஸ் வாக்கு சதவீதம் அதிகரிப்பு... திருவாய் மலர்ந்த தமிழிசை!
குஜராத், ஹிமாசலப் பிரதேச தேர்தல் முடிவுகள் பாஜக.,வுக்கு உற்சாக டானிக் கொடுத்துள்ளதால், நாடு முழுவதும் பாஜக., தொண்டர்கள் விழாக் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர். பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தமிழகத்திலும் பாஜக.,வினர் குஜராத் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். பாஜக.,வின் இரு மாநில வெற்றியை சென்னை கமலாலயத்தில் பாஜக., தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் இனிப்பு வழங்கி கொண்டாடினார்.
பேரவைத் தேர்தல் நடந்த 2 மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. ரூ. 500, ரூ.1000 ஒழிந்தவுடன் பாஜகவும் ஒழிந்துவிடும் என சிலர் கூறினர். ஆனால், நாட்டில் உள்ள மக்கள் மகிழ்ச்சியான தருணத்தில் இருந்து கொண்டுள்ளார்கள் என்று கூறினார் தமிழிசை. குஜராத், இமாச்சலபிரதேச சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக முன்னிலையில் முன்னிலையில் இருப்பதால் சென்னை கமலாலயத்தில் இனிப்புகள் வழங்கி பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன், கடுமையாக நிகழ்த்தப் பட்ட எதிர் பிரசாரத்தை, எதிர்ப்புக் கருத்துக்களை எல்லாம் முறியடித்து பாஜக., வெற்றி பெற்றுள்ளது.
மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி., போன்றவற்றால் பாஜக., ஒழிந்து விட்டது என்று கூறினார்கள். ஆனால் இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னர் நடந்த தேர்தல்களில் பாஜக., வெற்றி பெற்றே வந்துள்ளது.
ஜிஎஸ்டி., வரிவிதிப்பு முறை வந்த பிறகு பாஜக., அவ்வளவுதான், முற்றிலும் ஒழிந்து விட்டது என்றார்கள். ஆனால் இரு மடங்காக எழுச்சி பெற்றுள்ளது.
வட மாநிலங்களில் பெற்ற வெற்றியைப் போல், தமிழகத்திலும் பாஜக., வெற்றி பெறும். பாஜக.,வின் இந்த வெற்றியால், எதிர்க் கட்சிகள் வாயடைத்துப் போய் உள்ளன. யார் வந்தாலும் சரி, பாஜக.,வின் வெற்றியைத் தடுக்க முடியாது.
குஜராத்தில் பாஜக., பெற்ற வெற்றி, மக்களுக்குக் கிடைத்த வெற்றி. வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிகப்படியான இடங்களில் பாஜக., வெல்லும். காங்கிரஸ் செய்த ஏமாற்று வேலையால்தான் குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது... என்று கூறினார் தமிழிசை சௌந்தர்ராஜன்.