பீகாரில் கடும் போட்டி... தொடர்ந்து முன்னிலை வகிக்கும் காங்கிரஸ்-ஆர்.ஜே.டி. கூட்டணி..!
பீகாரில் நடைபெற்றுவரும் வாக்கு எண்ணிக்கையில் ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்துவருகிறது.
பீகார் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணத் தொடங்கப்பட்டன. பீகாரில் உள்ள 55 மையங்களில் வாக்கு எண்ணிக்கை பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகின்றன. இத்தேர்தலில் பாஜக-ஐக்கிய ஜனதாதளத்துக்கும் காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணிக்கு நேரடி போட்டி நிலவிவருகிறது.
பீகாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 122 தொகுதிகளை வெல்லும் கட்சி அல்லது கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும் என்ற நிலையில், காங்கிரஸ் - ஆர்.ஜே.டி. கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்துவருகிறது. 9 மணி நிலவரப்படி இக்கூட்டணி 95 தொகுதிகளில் முன்னிலை வகித்துவருகிறது. ஆனால், தொடர்ச்சியாக மூன்று முறை முதல்வர் பதவி வகித்துவரும் நிதிஷ்குமார் தலைமையிலான ஜேடியூ - பாஜக கூட்டணி 77 தொகுதிகளில் முன்னிலை வகித்துவருகிறது.
மொத்தம் 16 சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், தொடக்க சுற்று வாக்கு எண்ணிக்கையில் ஆர்.ஜேடி. காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் உள்ளது. ஆனால், இக்கூட்டணிக்கு நெருக்கமாக பாஜகவும் ஜேடியும் முன்னிலை வகித்துவருவதால் பிற்பகலில்தான் எந்தக் கூட்டணி வெல்லும் என்பது தெளிவாகத் தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.