நாடக கம்பெனி எல்லாம் ஆட்சிக்கு வந்தா வளர்ச்சி இருக்காது...! காங்கிரசை போட்டுத் தாக்கும் பாஜக!
காங்கிரஸ் கட்சி ஒரு நாடகக் கம்பெனி என்றும், காங்கிரசிடம் அதிகாரத்தை அளித்தால் நாடு வளர்ச்சியடையாது என்றும் இந்த நாடகக் கம்பெனி நம் நாட்டில் இருக்கக் கூடாது என்றும் மத்திய அமைச்சர் அனந்குமார் ஹெக்டே விமர்சனம் செய்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் மே 12 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள, அனைத்து கட்சிகளும் பிரசார பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
சித்தராமையா தலைமையில்ன காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், ஆட்சியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கில் எதிர்கட்சியான பாஜக முயற்சித்த வருகிறது. முதலமைச்சர் வேட்பாளராக எடியூரப்பாவை பாஜக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தேர்தலை எதிர்கொள்ளத் தேவையான பணிகளை பாஜக மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. பிரதமர் மோடி, அமித்ஷா என பாஜகவின் பல்வேறு
தலைவர்கள் கர்நாடகாவில் முகாமிட்டு, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே, கர்நாடக மாநிலம் கான்பூரில் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தேர்தல் பிரச்சாரத்தின்போது மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டேம, காங்கிரஸ் ஒரு நாடகக் கம்பெனி என்று கூறினார். 70 ஆண்டுகளாக இந்த நாடகக் கம்பெனிதான் இந்தியாவை ஆண்டது. காங்கிரசிடம், அதிகாரத்தை அளித்தால் நாடு வளர்ச்சியடையாது. எதிர்காலத்தில் இந்த நாடகக் கம்பனி நம் நாட்டில் இருக்கக் கூடாது என்றார்.
இந்து மதம் என்று ஒரு மதம் இருக்கிறது என்பதை தற்போது ராகுல் காந்தி உணர்ந்துள்ளார் என்றும் அதனால்தான் அவர் கோயில்களுக்கு சென்று வருவதாகவும் கூறினார்.
யாரோ ஒருவரின் ஆலோசனையின்படிதான் ராகுல் கோயிலுக்கு செல்வதாகவும், காங்கிரசுக்கு இந்துக்கள் மற்றும் இந்துத்துவ நலன்களைப் பற்றி அக்கறை
இல்லை என்றும் மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே கூறினார்.