ஆசை வார்த்தை கூறி தன்னிடம் இருந்து மூன்றரை லட்சம் ரூபாய் பணமும் 10 பவுன் நகையையும் ஏமாற்றி வாங்கிவிட்டு திருப்பித் தராமல் மோசடிசெய்துவிட்டதாக தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமாருடன் தொடர்பு படுத்தி பேசப்பட்ட சிந்து என்ற பெண் மீது சூப் கடைக்காரர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

அமைச்சர் ஜெயகுமாருடன் சென்னை பிராட்வே பகுதியைச் சேர்ந்த சிந்து என்ற பெண்ணை தொடர்பு படுத்தி சமூக வலைதளங்களில் பரபரப்பு புகார் எழுந்தது. ஆனால் அது பொய்யான தகவல் என்றும், யாரோ எனது பெயருக்கு களங்கம் உண்டாக்கும் விதத்தில் மார்பிங் செய்து ஆடியோ வெளியிட்டுவிட்டததாக அமைச்சர் ஜெயகுமார் மறுத்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் இப்பிரச்சனையை சட்டப்படி சந்திப்பேன் என்றும் அமைச்சர் அறிவித்திருந்தார். இந்நிலையில் அந்தப் பெண் சிந்து மீது வியாசர்பாடி முல்லை காம்ப்ளக்ஸ் பகுதியில் வசித்து வரும் சூப் கடைக்காரார் சந்தோஷ்குமார் என்பவர் ஒரு புகார் அளித்துள்ளார்.

அதில் நான் மண்ணடி புதுத் தெருவில் சூப் கடை நடத்தி வருகிறேன். அந்தக் கடைக்கு சிந்து அடிக்கடி வந்து செல்வார். அப்போது எங்கள் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது. கடந்த நவம்பர் மாதம் சிந்து திடீரென்று என்னிடம் வந்து தனது அம்மாவுக்கு ஹார்ட் ஆப்ரேஷன் பண்ண வேண்டும்.அவசரமாக பணம் வேண்டும் என கூறி அழுதார்.

அவர் மீது பரிதாபப்பட்டு என்னிடம் இருந்த மூன்றரை லட்சம் ரூபாய் பணத்தையும், 10 பவுன் நகையையும் சிந்துவிடம் கொடுத்தேன்.

ஆனால் அதை வாங்கிச் சென்ற சிந்து அதன்பிறகு என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். மேலும் நான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்பதற்காக அவரது வீட்டுக்குச் சென்றபோது என்னை சிந்துவும், அவரது தாயாரும் சேர்ந்து அவமானப்படுத்தி அனுப்பிவைத்துவிட்டனர். எனவே அந்த பணத்தையும் நகையையும் திருப்பி வாங்கித் தர வேண்டும் என தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து எம்கேபி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.