விரைவில் ஆரம்பம்.. உ.பிகளுக்கு செம்ம குட் நியூஸ்.. அமைச்சர் ஏ.வ வேலு வெளியிட்ட அதிரடி சரவெடி தகவல்.
எழுத்தால், கலையால் ஆண்டு, கொள்கை அரசியல் வானில் சூரியனாய் எழுந்த தலைவர் கருணாநிதி நினைவிடத்தின் மாதிரி தோற்றம் இது என அவர் குறிப்பிட்டிருந்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு நினைவிட கட்டுமானம் தொடர்பாக இரண்டு தினங்களில் அரசாணை வெளியிடப்படும் எனவும், விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு தகவல் தெரிவித்துள்ளார். அரசாணை வெளியிட்ட உடன் நினைவிடம் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சாதனைகளையும், சிந்தனைகளையும், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும் என கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் விதி எண் 110ன் கீழ் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.
அண்ணா நினைவிட வளாகத்தில் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே நினைவிடம் அமைக்கப்படும் என்றும் அந்த நினைவிடத்தில் கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை அடங்கிய நவீன ஒளிப்படங்கள் இடம் பெறும் என்றார். அதேபோல் இதை வரவேற்று பேசி எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஒபிஎஸ் கருணாநிதிக்கு நினைவிடம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வரவேற்பதாக கூறினார், அவரைப் பற்றிய அனைத்து சிறப்பம்சங்களும் நினைவிடத்தில் இடம்பெற கோரிக்கை வைக்கிறேன் என்றும், என் தந்தையும் தீவிர கருணாநிதி பக்தர் என அப்போது அவர் கூறி இருந்தார். அதைத் தொடர்ந்து கருணாநிதிக்கு அமைக்கப்படவுள்ள நினைவிடத்தின் மாதிரி வரைபடத்தினை சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். உதய சூரியன் வடிவில் கருணாநிதி நினைவிடமும் பிரம்மாண்டமாக வடிவிலான தூணும் அதில் இடம் பெற்றிருந்தன.
எழுத்தால், கலையால் ஆண்டு, கொள்கை அரசியல் வானில் சூரியனாய் எழுந்த தலைவர் கருணாநிதி நினைவிடத்தின் மாதிரி தோற்றம் இது என அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் நினைவிடம் அமைப்பது தொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதேபோல் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார், மேலும் பொதுப்பணித்துறையினர் தயாரித்த விரிவான திட்ட அறிக்கைக்கு கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் அனுமதி அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, நிதித்துறை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் இரண்டு தினங்களில் அரசாணை வெளியிடப்படும் என்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று தெரிவித்தார். அரசாணை வெளியிட்ட உடன் நினைவிட பணிகள் தொடர்பான ஒப்பந்தப்புள்ளிகள் கோருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதைத்தொடர்ந்து நினைவிட பணிகள் விரைவில் தொடங்கும் என அவர் கூறினார்.