கூட்டணிக்கு தூது விடும் வேலை வேணாம்... மு.க. ஸ்டாலின் அழைக்கட்டும்... திமுக கூட்டணி தொடர்பாக கமல் அதிரடி..!
திமுகவிலிருந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், தூது விடுவதை எல்லாம் ஏற்க முடியாது. தலைமையிடமிருந்து அழைப்பு வர வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4-ஆம் ஆண்டு தொடக்க விழா தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்று பேசினார். “நாட்டில் பசு மாட்டுக்கு கிடைக்கும் மரியாதைகூட மனிதர்களுக்கு கிடைப்பதில்லை. அதுவும் தமிழனுக்கு கிடைப்பதில்லை. பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டு பல முறை கடிதம் எழுதினேன். ஆனால், எந்த பதிலும் கிடைக்கவில்லை. நான் கேட்டது கட்சியில் சேர்ந்து காவி துண்டு போட்டுக் கொள்ள அல்ல. நான் ஆரோக்கியமாக இருக்கும்போதே மக்கள் சேவையாற்ற வேண்டும். அதற்கு இன்னும் 5 ஆண்டுகள் உண்டு. இப்போது எனக்கு 60 வயது. சக்கர நாற்கலியில் வந்து நான் யாரையும் தொந்தரவு செய்ய மாட்டேன்.
திமுக, அதிமுக உட்பட எல்லா கட்சிகளிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நல்லப் பணிகள் செய்து விட்டு அக்கட்சிகளில் மரியாதை இல்லாமல் இருக்கிறார்கள். அவர்கள் மக்கள் நீதி மய்யத்தில் சேர வேண்டும் என்று நான் அறைகூவல் விடுக்கிறேன். மக்கள் நீதி மய்யம் ஆட்சி அமைந்தால் மத நல்லிணக்கம் தானாக நடக்கும். ஆனால், இன்றைய அரசியல் அப்படி இல்லை. ஆட்சியில் இருக்கும்போதே முதல்வர் கைதாகும் வரலாற்றை ஏற்படுத்திய கட்சி அதிமுக. இரட்டை இலை என்று எம்ஜிஆர் காட்டியது இரண்டு பேருக்கு இலை போட்டு சாப்பிட என நினைத்துக் கொண்டார்கள் போலும்.
நான் சொல்வதையெல்லாம் முதல்வர் செய்கிறார் என மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சிகொள்கிகிறார். அப்படியானால், டாஸ்மாக் மூட வேண்டும் எனக் கூறுங்கள். கூவத்தூரில் இவர் அவருக்கு ஊத்தி கொடுத்தார். அவர் இவருக்கு ஊத்தி கொடுத்தார் எனச் சர்ச்சை வந்தது. ஆனால், ஊருக்கே ஊத்திக் கொடுத்தவர்கள் இவர்கள். திமுகவும் அதிமுகவும் ஒரே விசயத்தைதான் திரும்பவும் செய்கின்றன. இரு கட்சிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் அரசியலுக்கு வந்தபோது, உங்களுக்கு வர வேண்டிய 300 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று கூறினார்கள். பரவாயில்லை என்றுதான் நான் அரசியலுக்கு வந்தேன். அதனால்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். மார்ச் 7-ஆம் மக்கள் நீதி மய்யத்தின் மாநாடு தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தும்.” என்று கமல்ஹாசன் பேசினார்.
பின்னர் கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ரஜினிகாந்துடன் நான் அரசியல் பேசவில்லை. அவர் வரவில்லை என்ற பிறகு எப்படி உடன் பணியாற்ற அழைக்க முடியும்? அது சரியாக இருக்குமா? இத்தேர்தலில் 3-வது அணி மலரும் என்றே தோன்றுகிறது. திமுகவிலிருந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், தூது விடுவதை எல்லாம் ஏற்று கொள்ள முடியாது. தலைமையிடமிருந்து அழைப்பு வர வேண்டும்” என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.