நிலக்கரியை காணோம் விவகாரம்.. மடியில் கனமும் இல்லை.. வழியில் பயமுமில்லை.. செந்தில்பாலாஜிக்கு தங்கமணி பதிலடி!
நிலக்கரி காணாமல் போன விவகாரத்தில் எனக்கு மடியில் கனமில்லை. அதனால், வழியிலும் பயமில்லை என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
வடசென்னை அனல் மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரியை காணோம் என்று தமிழக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்திருந்தார். இதில் யார் தவறுய் செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செந்தில்பாலாஜி தெரிவித்திருந்தார். செந்தில் பாலாஜியின் இந்தக் கருத்துக்கு மின்துறை முன்னாள் அமைச்சர் தங்கமணி பதிலளித்திருக்கிறார். “அதிமுக அரசு ஏற்கனவே எடுத்த கணக்கைத்தான் தாங்கள் கண்டுபிடித்ததைப் போல அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். நிலக்கரி தட்டுப்பாடு வந்தநேரத்தில் நாங்கள் ஆய்வு செய்தோம். அப்போதே நிலக்கரி குறைந்திருந்த விவகாரம் தெரியவந்தது.
முந்தைய ஆட்சியிலேயே 2.38 லட்சம் டன் நிலக்கரியைக் காணவில்லை எனக் கணக்கெடுத்தோம். என்னை பொறுத்தவரை எனக்கு மடியில் கனமில்லை. அதனால், வழியிலும் பயமில்லை. யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்க நானும் முழு மனதோடு ஆதரிக்கிறேன். மின் உற்பத்திக்காக வாங்கிய கடன் குறித்து நானும் விளக்கம் அளித்திருக்கிறேன். நிலக்கரி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் வாய்ப்பு அளித்தால், விளக்கம் அளிக்கத் தயார். அதிமுக அரசை குறைகூற வேண்டும் என்பதற்காகவே செந்தில்பாலாஜி இக்குற்றச்சாட்டைத் தெரிவித்திருக்கிறார்” என்று தங்கமணி தெரிவித்தார்.