நூல் விலை உயர்வை தடுக்க நடவடிக்கை தேவை... பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!!
நூல் விலை உயர்வை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
நூல் விலை உயர்வை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பருத்தி நூல் விலை வரலாறு காணாத வகையில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில், ஜவுளித்தொழிலும் அதை நம்பியுள்ள நெசவாளர்களும், தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு பருத்தி நூல் விலை உயர்வை உடனடியாக தடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுக்குறித்த அவரது கடிதத்தில், தொழில்துறையிலும், நெசவாளர்கள் மத்தியிலும் அதிகரித்து வரும் அதிருப்தி கவலையளிக்கிறது. பிரதமர் அவர்கள் உடனடியாக தலையிட்டு இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். பருத்திக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரியை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்தும், நிலைமை சீரடையவில்லை. பருத்தி மற்றும் நூல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த ஆபத்தான சூழ்நிலை தமிழகத்தில் ஜவுளித் தொழிலுக்கு பரவலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பருத்தி, நூல் விலை உயர்வால் ஜவுளித்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விலை உயர்வால் தமிழக ஜவுளித்தொழில் எதிர்கொள்ளும் பிரச்னைகளை கருத்தில் கொள்ள வேண்டும். பருத்தி, நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் நெசவாளர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பு அவர்களை கடும் போராட்டத்திற்கு வித்திட்டுள்ளது. பொருளாதார இழப்புகளை சந்திக்கும் ஜவுளித் தொழிலில் ஒரு அசாதாரணமான சூழல் உருவாகியிருக்கிறது.
ஆகவே, இவற்றையெல்லாம் மனதில் கொண்டு திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற குழு துணை தலைவர் கனிமொழி தலைமையில் மேற்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து சென்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனையும், ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலையும் நாளைய தினம் (18.5.2022) சந்தித்து நெசவாளர்கள் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காண வேண்டும் என்று நேரில் வலியுறுத்துமாறு முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார். நெசவாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறவும், அவர்களின் இன்னல்களை நீக்கவும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு மத்திய அரசினையும் தொடர்ந்து வலியுறுத்தும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.