காணொலி காட்சி மூலம் ஆஜாரான உள்துறை செயலாளர் பிரபாகரிடம் எதனடிப்படையில் 25 நிமிடங்கள் தடுத்து நிறுத்தினீர்கள்? பொது ஊழியரான நீதிபதியான என்னை பணி செய்ய விடாமல் தடுத்தது நீதிமன்ற அவமதிப்பு என நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

நீதிபதியை பணி செய்யவிடாமல் 25 நிமிடம் தடுத்து வைத்த காவல்துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்த உயர்நீதிமன்றம், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு அளிக்கும் அதே மரியாதையை நீதிபதிகளுக்கும் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சிவாஜிகணேஷனின் 96வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னை அடையாறு டி.ஜி.எஸ்.தினகரன் சாலையில் உள்ள சிவாஜி மணி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதற்காக சாலைகளில் இரும்பு தடுப்புகளை அமைத்து சாலைகளில் போக்குவரத்து நிறுத்தி வைத்தனர்.

இதனால் அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலையில் பணிக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதை போன்று அந்த சாலை வழியாக உயர்நீதிமன்றம் வந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வாகனத்தையும் காவல்துறையினர் தடுத்துள்ளனர். இதனால் உயர்நீதிமன்றத்திற்கு 25 நிமிடம் தாமதமாக வந்ததால் தனது பணி பாதிக்கப்பட்டுள்ளதால் இது குறித்து உள்துறை செயலாளர் ஆஜாரகி விளக்கம் அளிக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.

அதன்படி காணொலி காட்சி மூலம் ஆஜாரான உள்துறை செயலாளர் பிரபாகரிடம் எதனடிப்படையில் 25 நிமிடங்கள் தடுத்து நிறுத்தினீர்கள்? பொது ஊழியரான நீதிபதியான என்னை பணி செய்ய விடாமல் தடுத்தது நீதிமன்ற அவமதிப்பு என நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார். நடைபெற்ற நிகழ்விற்கு வருத்தம் தெரிவித்த உள்துறை செயலாளர் சென்னை மாநகர காவல் ஆணையரை நேரில் வரவழைத்து விளக்கம் கேட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வு நடைபெறாது என உறுதியளித்தார்.

இதையடுத்து, முதலமைச்சர் அமைச்சர்கள் நிகழ்ச்சிக்கு போகும் போது இதுபோல் காவல்துறையினர் தடுத்து நிறுத்துவார்களா என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் அதே மரியாதையை நீதிபதிகளுக்கும் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த நிகழ்வு நீதிமன்ற அவமதிப்பாக இருந்தாலும் எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காது என்று நம்புவதாக நினைத்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என தெரிவித்தார்.