கனடாவில் கோனா எல்க்ட்ரிக் கார் திடீரென வெடித்து சிதறியதால் அதிர்ச்சி..!
அண்மையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஹூண்டாய் கோனா எஸ்.யூ.வி. காரை அறிமுகம் செய்து வைத்த நிலையில் அந்த வகை எலெக்ட்ரிக் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் இந்திய வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இந்தியாவில் எரிபொருள் பயன்பாட்டை தவிர்த்து எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை அதிகபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதற்கான தீவிரமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அந்த வகையில் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களின் பயன்பாடு அதிகரித்திருக்கும் வேளையில் எலெக்ட்ரிக் கார்களையும் அறிமுகப்படுத்தும் வகையில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது மத்திய அரசு.
இந்த நிலையில், கடந்த ஜூலை 9ம் தேதி, இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் காரான ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா எஸ்.யூ.வி. அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அந்த வாகனத்தில் பயணித்து அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த காரில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 452 கிமீ வரை பயணித்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரின் விலை 25.30 லட்சம் ரூபாய்.
இதன் மூலம் கார் பிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததனர். அதே நேரம், கனடா நாட்டு கோனா கார் மாடலில் நடந்த விபத்தால் மக்கள் சற்று அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். கனடாவின் மாண்ட்ரியல் என்ற பகுதியில் உள்ள வீட்டின் காரேஜில் நிறுத்திவைக்கப்பட்ட ஹூண்டாய் கோனா கார் கடந்த ஜூலை 26 அன்று திடீரென வெடித்து விபத்துக்குள்ளனது.
இந்த விபத்து கார் பிரியர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக ஹூண்டாய் கோனா நிறுவனத்துக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.