ஒரு சாதாரண மனிதன் முதலமைச்சராக இருந்தால் என்னவெல்லாம் பேசுகிறார்கள் பாருங்கள்.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளராக மருத்துவர் எழிலனுக்கு ஆதரவாக நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பொதுமக்களிடையே பேசிய ஆ.ராசா, கட்சியில் அடிமட்ட தொண்டராக இருந்து உழைத்து முதல்வர் வேட்பாளராக உயர்ந்தவர் மு.க ஸ்டாலின், அவர் முறையாக திருமணம் நடந்த தாய்க்கு முறையாக பிறந்த குழந்தை. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அப்படியல்ல முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் குறுக்கு வழியில் பதவிக்கு வந்தவர். அதாவது கள்ள உறவில் பிறந்த குழந்தை என ஆபாசமாக பேசினார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ராசாவின் ஆபாச பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்ததோடு, தமிழகம் முழுவதும் பல்வேறு காவல்நிலையங்கள் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது தாயாரைப் பற்றி அவதூறாக விமர்சித்தது குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.

சென்னை திருவொற்றியூரில் நான் ஒரு முதலமைச்சராக இருக்கிறேன். என் தாய் என நான் பார்க்கவில்லை. உங்கள் குடும்பத்தில் ஒரு தாயாக பாருங்கள். ஒரு சாதாரண மனிதன் முதலமைச்சராக இருந்தால் என்னவெல்லாம் பேசுகிறார்கள் பாருங்கள். முதலமைச்சருக்கே இப்படியொரு நிலை என்றால், உங்களைப் போன்ற மக்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பது. திமுக அதிகாரத்திற்கு வந்தால் தாய்மார்களின் நிலை என்னவென்று நினைத்துப் பாருங்கள். தாய்மார்களை கொச்சைப்படுத்தி பேசுபவர்களுக்கு தக்க தண்டனை கொடுங்கள் . என்னுடைய தாய் கிராமத்தில் வளர்ந்தவர், விவசாயி. இரவு பகல் பாராமல் உழைத்தவர். இப்போது இறந்துவிட்டார். அவரைப் பற்றி இழிவாக தரக்குறைவாக பேசுகிறார்கள். ஒரு முதலமைச்சருக்கே இப்படியொரு நிலைமை என பேசும் போதும் தழுதழுத்த குரலில் பேசினார். 


ஏழை, பணக்காரர்கள் எல்லாருக்கும் தாய் பாசம் என்பது ஒன்று தான். சாமானியர் ஒருவர் முதல்வரானால் அவரது தாயைப் பற்றி இப்படி பேசுவீர்களா?. தாயை இழிவாக பேசுபவர்களுக்கு ஆண்டவன் அதற்கு உரிய தண்டனையை வழங்குவார். அராஜக திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் பெண்களை எப்படி இழிவுபடுத்துவார்கள் என்பதை அனைவரும் யோசித்து வாக்களியுங்கள் என உருக்கமாக பேசினார்.