சினிமாவ ஓட்டாத, சேனலை காட்டாத! ரெய்டு ரவுசுகள்: எங்கப்பா போனீங்க கருத்துரிமை போராளிங்கல்லாம்?
ஐ.டி. என்று நடுக்கமாக அழைக்கப்படும் வருமான வரித்துறை இன்று சுமார் 160 சொச்சம் இடங்களில் ரெய்டு நடத்திக் கொண்டிருக்கிறது. ரெய்டு செய்யப்படும் இடங்களுக்குள் சென்றதும் சம்பந்தப்பட்ட நபரின் மொபைலை பறித்து வைப்பது, வீட்டு டெலிபோனை டிஸ்கனெக்ட் செய்வது, ‘வூட்ட வுட்டு யாரும் வெளியில போவ கூடாது’ என்று நாட்டாமை விஜய்குமார் ஸ்டைலில் கட்டையிடுவது என்று வழக்கமான ஃபார்மாலிட்டிகள் பொதுவாக நடக்கும். ரெய்டு நடத்தப்படும் இடம் மற்றும் அதன் உரிமையாளர்கள் மட்டுமே முடக்கவும், கட்டுக்குள் வைக்கப்படவும் செய்வார்கள்.
ஆனால் இன்று ஐ.டி. நடத்திக் கொண்டிருக்கும் ரெய்டு மேளாவால் பொதுமக்களும் இப்படி கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்து விழுகின்றன.
அதாவது...ரெய்டு நடைபெறும் மையங்களில் ஒன்றான சென்னை ஃபீனிக்ஸ் மாலில் உள்ள இளவரசியின் மகன் விவேக்குக்கு சொந்தமான ஜாஸ் சினிமாஸின் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளனவாம். ஆன் லைனில் டிக்கெட் புக் செய்துவிட்டு வந்த பர்முடாஸ் மற்றும் ஸ்கர்ட் பேர்வழிகள் ‘ஹலோ! வாட்ஸ் கோயிங் ஆன் ஹியர், வீ காண்ட் லூஸ் அவர் மணி’ என்று தாட்பூட் இங்கிலிபிஸ்ஸில் பேசியும் வேலைக்காவலை என்கிறார்கள்.
அதேபோல் டி.டி.வி.தினகரன் தடாலடியாய் பேட்டி கொடுத்து இந்த ரெய்டு சீரியஸ்னஸை சிரிப்பாய் சிரிக்க வைத்ததால் அவரது பேட்டியை லைவ் ரிலே செய்து கொண்டிருந்த ஒரு சில சேனல்கள் திடீரென்று டி.வி. ஸ்கிரீனில் மறைந்து சம்பந்தா சம்பந்தமில்லாமல் சங்கரா டி.வி. ஆசீர்வாதம் சேனல் எல்லாம் தோண்ற ஆரம்பித்திருக்கின்றன. சுடச்சுட அரசியல் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் திடீரென சுப்ரபாத விஷூவல் ஓடுவதை பார்த்து ஜெர்க் ஆகியிருக்கின்றனர்.
தினாவின் லைவ் முடிந்த பின்னும் பல இடங்களில் சேனல்கள் தூக்கியடிக்கப்பட்ட பஞ்சாயத்து சரியாகவில்லையாம். சக சேனல் இப்படி டீலில் விடப்பட்டதை பார்த்து ஒரு சில சேனல்கள் அடக்கி வாசிக்க, சில சேனல்களோ வேண்டுமென்றே தினாவின் அட்ராசிட்டி பேட்டியை ஒளிபரப்பி கெத்து காட்டுகிறார்களாம். அவர்கள் மிகப்பெரிய இடமென்பதால் லோக்கல் ஆதிக்க புள்ளிகளால் அவர்களுடன் மோதமுடியவில்லையாம்.
ஆக மொத்தத்தில் ரெய்டு எனும் பெயரில் இன்று தமிழகத்தில் நடந்திருக்கிற, நடந்து கொண்டிருக்கிற கருத்து மற்றும் நினைத்தபடி வாழும் உரிமைக்கு எதிரான தடைகள் மிக மோசமாக விமர்சிக்கப்பட வேண்டியவையே என்று ஆங்காங்கிருந்து மக்கள் புலம்ப துவங்கியுள்ளனர். ஆனால் இதைப் பற்றியெல்லாம் பேச எந்த கருத்துரிமை போராளியும் இதுவரை முன்வரவில்லை என்பதும் சோகம் என்கிறார்கள்.
ஆனால் ரெய்டு தரப்போ ‘சேனல் மாற்றப்பட்டது பற்றி எங்களுக்கு தெரியாது. ஆனால் ரெய்டு நடத்தப்பட வேண்டிய பாயிண்டுகளில் தியேட்டரும் அடங்குகையில் அங்கு மட்டும் எப்படி ஷோ நடத்த அனுமதிக்க முடியும்? லாஜிக் இல்லாத விமர்சனமாக இருக்கிறதே!’ என்கிறார்கள்.
கவனிக்க வேண்டிய விஷயமே!