தமிழக அரசின் சார்பில் பயிற்சி மையம் - முதலமைச்சர் உத்தரவு
வட சென்னையில் தமிழக அரசின் சார்பில் பயிற்சி மையம் தொடங்க முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில், பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணாக்கர்கள் பயன் பெறும் வகையில், மத்திய மாநில அரசுத் துறைகள் மற்றும் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளில் வேலை வாய்ப்பு பெறும் வகையில் அரசின் சார்பில் பயிற்சி மையம் துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டதாகவும், அதன்படி பொருளாதார ரீதியில் பின் தங்கிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான வட சென்னையில் பயிற்சி மையம் இந்த ஆண்டு துவக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அரசுக்கு நடப்பாண்டில் 1 கோடியே 53 இலட்சம் ரூபாயும், அதன் பின்னர் ஆண்டு தோறும் 1 கோடியே 25 இலட்சம் ரூபாயும் செலவு ஏற்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்பயிற்சி மையத்தில், போட்டித் தேர்வுகளை, திறமையாக எதிர்கொண்டு அவற்றில் தேர்ச்சி பெறும் வகையில், முறையான பயிற்சி அளிக்கப்படும் எனவும் ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும், 500 மாணவர்கள் என்ற வீதத்தில், ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக பயிற்சி அளிக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாணவர்களின் திறன் மேம்பட்டு வாழ்வாதாரம் சிறக்க வழிவகை ஏற்படும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.