தமிழ்நாட்டில் தொழில் நகரம் - பிரதமருக்கு நன்றி தெரிவித்தார் எடப்பாடி...!
தமிழ்நாட்டில் தொழில் நகரம் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்ததற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முதல் புல்லட் ரயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதனை பிரதமர் நரேந்திர மோடியும், ஜப்பான் பிரதமர் சின்சோ அபேவும் துவக்கி வைத்தனர்.
புல்லட் ரயில் திட்டத்தின் மூலம் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும், அதிநவீன தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் இந்த திட்டம் துவக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
வரும் 2023 ஆம் ஆண்டுக்குள் புல்லட் ரயில் திட்டம் தயாராகிவிடும் என்றும் பிரதமர் மோடி கூறியிருந்தார்.
இந்த நிலையில், குஜராத் மாநிலம், காந்தி நகரில் இந்தியா - ஜப்பான் உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, ஜப்பான் உதவியுடன், இந்தியாவின் 4 இடங்களில் தொழில் நகரங்கள் உருவாக்கப்படும் என்றார்.
தமிழகம், ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் தொழில் நகரங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.