தீவிரமடையும் கொரோனா பரவல்... அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு...!
அனைத்து கட்சி சட்டமன்ற தலைவர்களை அழைத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மே 24ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, கொரோனா தடுப்பு குறித்து எவ்வித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் அனைத்து கட்சியினருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தார்.
இந்நிலையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து விவாதிப்பதற்காக நாளை அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. கொரோனா பரவல் மற்றும் தடுப்பூசி தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
தற்போது சட்டமன்றத்தில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இடம் பெற்றிருக்கும் இந்த சமயத்தில், அனைத்து கட்சி சட்டமன்ற தலைவர்களை அழைத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்ஸிஜன் உற்பத்திக்காக திறக்க அனுமதிப்பது குறித்து அனைத்து கட்சியினர் உடனும் ஆலோசித்தது குறிப்பிடத்தக்கது.