தமிழகத்தில் நாடாளுமன்ற தொகுதியை குறைக்க பார்க்கிறார்கள் என்றும், இந்தியா கூட்டணி கொள்கை கூட்டணி என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று தஞ்சாவூரில் திராவிடர் கழகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.இதில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை தமிழ்நாடு முறையாக செயல்படுத்தியதால் நாடாளுமன்ற தொகுதியை குறைக்க பார்க்கிறார்கள். தமிழகம் இழந்த அனைத்து உரிமைகளும் மீட்கப்படும்.

தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறிய மாநிலமாக மலர வேண்டும். இந்தியா கூட்டணி அரசியல் கூட்டணி அல்ல. இந்தியா கூட்டணி ஒரு கொள்கை கூட்டணி ஆகும்” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “திராவிடர் கழகம் கலைஞருக்கு மட்டுமல்ல, எனக்கும் தாய் வீடு தான். கலைஞரை முதலமைச்சராக்கியதே தந்தை பெரியார் தான்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/

அண்ணாவை சந்திப்பதற்கு முன்பே பெரியாரை சந்தித்தவர் கலைஞர். கலைஞர் நூற்றாண்டு விழா நடத்த முழு உரிமையும் திராவிடர் கழகத்துக்கு உண்டு. திமுகவுக்கும், தி.க.வுக்கும் உள்ள நட்பு உலகில் வேறு எந்த இயக்கங்களுக்கும் இருந்தது இல்லை.

தந்தை பெரியார், அண்ணா இல்லாத நேரத்தில் தனக்கு ஆறுதலாக இருந்தவர் கி.வீரமணி எனக் குறிப்பிட்டார் கலைஞர். என்னை பொறுத்தவரை தி.க.வும், திமுகவும் உயிரும் உணர்வும்போல தான்” என்று திராவிடர் கழகத்தை பற்றியும், பெரியாரை பற்றியும் புகழ்ந்து பேசினார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.
